சிவகாசியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு வந்தவர்களை விரட்டிய புதிய தமிழகம் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி சட்டமன்றத் தொகுதியில், தமிழகத் தேர்தலில் தனித்து நிற்கும் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட செங்கமலப் பட்டியைச் சேர்ந்த கனிப்பாண்டியன் என்பவர் வேட்பு மனு த் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணியி லுள்ள தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மருதம் மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் சந்தனபிரியா ( பசுபதிப் பாண்டியன் மகள்) தனது ஆதரவாளர்களுடன் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரச்சாரம் செய்ய சிவகாசிக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்தார்.
அப்போது சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளபட்டி, ஆலமரத்துப்பட்டி, முருகன் காலனி மற்றும் கங்காகுளம் பகுதிகளில் வாழும் தேவேந்திரகுல மக்கள் மற்றும் புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகளும் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் அனைவரையும் அங்கிருந்து செல்ல வேண்டுமென வலியுறுத்தினர். இதன் காரணமாக அப்பகுதிகளில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. தேவேந்திரகுல மக்கள் மற்றும் புதிய தமிழகம் கட்சியினரின் எதிர்ப்பால் அதிமுகவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.