தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்த செல்லையாவின் மகள் வள்ளியம்மாள் (70), திருமணம் ஆகாதவர். தன்னுடைய சொந்த நிலத்தில் மிளகாய் பயிரிட்டு வந்த அவர், தினசரி போல நேற்று காலை குளத்தூர்-வேடநத்தம் சாலையோர நிலத்திற்கு அறுவடை பணிக்காக சென்றிருந்தார்.

ஆனால் மாலை நேரம் கடந்தும் வீடு திரும்பாததால் அக்கம் பக்கத்தினர் கவலைக்குள்ளாகினர். இதையடுத்து அவரது அக்கா மகன் காமராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே அவர் வயல்வெளிக்கு சென்று தேடியபோது, வள்ளியம்மாள் நிலத்தில் குப்புற நிலையில் உயிரிழந்தபடி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குளத்தூர் காவலர்கள், வள்ளியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மிளகாய் பறிக்கும் வேளையில் நிலவிய கடும் வெப்பத்தையும் வெயிலையும் தாங்க முடியாமல் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து குளத்தூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.