சின்னக்குயில் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் பிரபல பின்னணிப் பாடகி சித்ரா. இவர் தனது மகள் குறித்து வெளியிட்ட பதிவு பலரது மனதையும் உருக வைத்துள்ளது.
தனது தெய்வீகக் குரலால் ரசிகர்களை கட்டிபோட்டவர் பாடகி கே. எஸ். சித்ரா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். சித்ரா தனது குரலுக்காக 6 முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி பத்மஸ்ரீ, பத்மபூஷண் போன்ற உயரிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
சித்ராவிற்கும், பொறியாளரான விஜயசங்கருக்கும் கடந்த 1987-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த இந்தத் தம்பதிக்கு, சுமார் 15 வருட கால நீண்ட தவத்திற்குப் பிறகு, கடந்த 2002-ம் ஆண்டு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தனது உலகமே அந்த குழந்தை தான் என சித்ரா தன் மகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், Gulf News Music Awards என்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகத் தனது 8 வயது மகள் நந்தனாவுடன் சித்ரா துபாய்க்குச் சென்றிருந்தார். அங்கு அவர்கள் தங்கியிருந்த வில்லாவில், யாருமில்லாத நேரத்தில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து குழந்தை நந்தனா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரத்திலிருந்து சித்ராவால் மீள முடியவில்லை. பல நாட்களாக திரையுலகை விட்டு விலகியே இருந்தார்.
மகள் நந்தனா உயிரிழந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், சித்ரா இன்றும் தனது மகளின் நினைவுகளாலேயே வாழ்ந்து வருகிறார். நந்தனாவின் நினைவு தினத்தையொட்டி அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீ இப்போது என்னுடன் இல்லை என்பது எனக்கு என்றும் மாறாத மற்றும் ஆறாத துயரமே. இருப்பினும், நாம் மீண்டும் சந்திக்கும் வரை நீ எப்போதும் என் இதயத்தில் இருப்பாய் என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு அவரது ரசிகர்களையும் கண் கலங்க செய்துள்ளது.