இந்தோனேசியா மலாக்கா ஜலசந்தியை குறிவைக்கும் அமெரிக்கா; சீனாவுக்கு சிக்கல்..?
Seithipunal Tamil April 15, 2026 05:48 AM

அமெரிக்காவும் இந்தோனேசியாவும் இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையில் ஏப்ரல் 13 கையெழுத்திட்டுள்ளது. தற்போது இந்த உடன்படிக்கை இந்தோ-பசிபிக் பகுதியின் மிக முக்கியமான வர்த்தக வழித்தடமான மலாக்கா ஜலசந்தியில் ட்ரம்ப் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிப்பார் என்று பேசப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் ஜான் கொன்ராட் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;

''உலக வர்த்தகம் நடக்கும் நீரிணைகளை பாதுகாப்பதில் அதிபர் ட்ரம்ப் தீவிர கவனம் செலுத்துகிறார். ஹார்மூஸைவிட மலாக்கா நீர்வழிப்பாதை சந்தேகத்திற்கு இடமின்றி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது'' என்று பதிவிட்டுள்ளார்.

அதேநேரம், அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் வீரர் ஜேக்கப் க்ரீச்சும் அவரது கருத்தை ஆமோதித்து உலகளாவிய எண்ணெய் கப்பல் போக்குவரத்து வழிகள் அமெரிக்க இராணுவத்தாலும் அதன் கூட்டாளிகளாலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்று பதிவிட்டுள்ளார்.

ஈரான் ஹார்மூஸ் நீரிணையை திறந்து விடாத நிலையில், அமெரிக்க கடற்படை அதனை முழுவதுமாக முடக்கி வருகிறது. 'எங்கள் விவகாரங்களில் தலையிடாதீர்கள்' என்று அமெரிக்காவுக்கு எச்சரிக்கைவிடுத்து ஈரானுக்கு சீனா ஆதரவு அளித்துள்ளது. ஹார்மூஸை முடக்கும் அதே வேளையில் இந்தோனேஷியாவுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை பல்வேறு யூகங்களை கிளப்பினாலும் இது சீனாவுக்கு ஏதோ ஒரு செய்தி சொல்வதாகவே கருதப்படுகிறது.

மலேசியா மற்றும் சிங்கப்பூருடன் சேர்ந்து, இந்தோனேசியா மலாக்கா ஜலசந்தியைக் கட்டுப்படுத்துகிறது. இந்தோனேசியா மலாக்கா நீர்வழிப்பாதையின் இருபுறமும் அமைந்துள்ளது. இது உலகின் மிகவும் பரபரப்பான கடல்வழிப் பாதைகளில் ஒன்றாகும், இதன் வழியாகத்தான் உலகளாவிய வர்த்தகத்தில் 40% நடைபெறுகிறது. எண்ணெய் முதல் கார்கள், செமிகண்டக்டர்கள் மற்றும் பல பொருட்கள் கொண்டுசெல்லும் வர்த்தகம் இதில் நடைபெறுகிறது.

மலாக்கா ஜலசந்தி

சீனாவும் ஜப்பானும் தங்கள் எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவை (LNG) பெறும் முக்கிய நுழைவாயில் இதுவாகும். சீனாவின் 80% எண்ணெய் இறக்குமதிகள் இந்த நீரிணை வழியாகவே செல்கின்றன என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த வழித்தடம் சீனாவின் தொழில்துறைப் பொருளாதாரத்திற்கும் அதன் 'மேட் இன் சைனா' தயாரிப்புகளுக்கும் இன்றியமையாதது.

ஹார்முஸைவிட, மலாக்கா ஜலசந்தி சீனாவின் பலவீனமான புள்ளியாகும். மேலும் சீனா சமீபத்தில், மலாக்கா நீரிணைக்கு அருகிலுள்ள பகுதிகள் உட்பட, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்கள் முழுவதும் கடலடித் தளத்தின் ஆழத்தையும் நிலப்பரப்பையும் அளந்து வரைபடமாக்கும் ஓர் அறிவியல் செயல்முறையை மேற்கொண்டது. மேலும் கண்காணிப்புத் திட்டத்தையும் மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான தனது நீர்மூழ்கிக் கப்பல் போர்த் திறன்களைக் கணிசமாக மேம்படுத்தக்கூடும் என்று சீனா கடற்படை வல்லுநர்கள் நம்புகின்றனர் என்று ராய்டர்ஸ் செய்தி அறிக்கை கூறுகிறது.

அதாவது, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மோதல்களில், ஜலசந்தியில் விதிக்கப்படக்கூடிய எந்தவொரு முற்றுகைக்கும் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதற்கான சீனாவின் ஒரு பரந்த முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.