55 வயதில் 138 பட்டங்கள் பெற்று 11 உலக சாதனைகள் படைத்துள்ள முன்னாள் ராணுவ வீரர்..!
Seithipunal Tamil April 15, 2026 05:48 AM

ராஜஸ்தானைச் சேர்ந்த முன்னாள் இந்திய ராணுவ வீரர் ஒருவர்  55 வயதில், 138 பட்டங்களைப் பெற்று 11 உலக சாதனைகள் படைத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தின் கிரோட் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்ததவர் சரத் சிங்.  அரசுப் பள்ளியில் தனது 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிப் படிப்பை முடித்தார். தற்போது 55 வயதான இவர், 1988-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 16 ஆண்டுகள் நாட்டிற்கு சேவை செய்துள்ளார்.

இவர் ராணுவத்தில் பணியாற்றியபடியே கல்வியிலும் தன் திறமையைக் காட்டி வந்துள்ளார். அதற்காக தனது வருடாந்திர இரண்டு மாத விடுப்பைத் தேர்வுகளில் பங்கேற்க எடுத்துக் கொண்டுள்ளார். அதேநேரத்தில், 2004-இல் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தொடர்ந்து தன்னை கல்விக்காக அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், அவர் இதுவரை 138 பட்டங்களைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதில் -3 முனைவர் பட்டங்களும், 07 இளங்கலைப் பட்டங்களும், 46 முதுகலைப் பட்டங்களும், 23 பட்டயங்களும் அடக்கம். இவை தவிர, 07 ராணுவப் படிப்புத் தகுதிகளும் மற்றும் 52 சான்றிதழ்களும் அடங்கும்.

அவருடைய பட்டங்கள் பி.காம், எல்.எல்.பி, எல்.எல்.எம், பி.ஜே.எம்.சி, மற்றும் பி.எட் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளன. அவர் இந்த பட்டங்களை இக்னோ, ஜெயின் பல்கலைக்கழகம் மற்றும் பிற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவனங்கள் மூலம் பெற்றார். அவருடைய சாதனைகள், இந்திய சாதனைப் புத்தகம், தங்க சாதனைப் புத்தகம், ஆசிய சாதனைப் புத்தகம் மற்றும் சர்வதேச சாதனைப் புத்தகம் உள்ளிட்ட பல மதிப்புமிக்க சாதனைப் புத்தக அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக ராணுவத்தின் சக்தி கமாண்டில் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றிய இவர், பணியில் ஓய்வுபெற்ற பின்பு, வீரர்களுக்கு சட்ட விஷயங்களில் தொடர்ந்து உதவிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.