ஊழல் அரசியல்வாதிகள் ரத்தம் கக்க வேண்டும்.. சுடுகாட்டில் விபரீத பூஜை செய்த சுயேட்சை வேட்பாளர்.. முழு விவரம் உள்ளே!
TV9 Tamil News April 15, 2026 11:48 AM

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் படுவேகமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், மதுரையில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தான் வெற்றி பெறுவதற்காக ஒரு வினோதமான பூஜையை செய்துள்ளார். மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர பாண்டியன் (41 வயது). சமூக ஆர்வலராக இருந்து வரும் இவர், மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளார். இந்த நிலையில், அவர் மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள சுடுகாட்டில் அமைந்துள்ள மயான காளி கோவிலில் சிறப்பு பூஜையை செய்ததாக கூறப்படுகிறது. அந்த பூஜையில் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுகளை பெறும் அரசியல்வாதிகள் ரத்த வாந்தி எடுக்க வேண்டும். அவர்கள் தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என பூஜ்ஜித்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விநோத யுக்தி

ஏனென்றால், எதிர்க்கட்சியின் வேட்பாளர் தோல்வி அடைவதற்காக பல்வேறு யுக்திகளை அரசியல் கட்சியினர் கையாண்டு பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். ஆனால், மதுரையில் அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் தோல்வி அடைவதற்காக சுயேட்சை வேட்பாளர் செய்த வினோதமான பூஜை அரசியல் களத்தை அதிர வைத்தாலும், சற்று வினோதமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சுடுகாட்டில் மேற்கொண்ட பூஜை தொடர்பாக சுயேட்சை வேட்பாளர் சங்கர பாண்டியன் கூறுகையில், நான் பலமுறை சட்டமன்ற தேர்தலில் சுயேட்ச்சையாக போட்டியிட்டு உள்ளேன்.

மேலும் படிக்க: திருப்பூரில் விஜய்யின் பரப்புரை.. அடுத்தடுத்து மயங்கி விழுந்த 14 பேர்..

வாக்காளர்களுக்கு பணம் அளித்து வெற்றி பெரும் கட்சியினர்

ஆனால், நான் போட்டியிடும் தொகுதியில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்று விடுகின்றனர். இதனால், எனக்கு ஒவ்வொரு முறையும் தோல்வி ஏற்படுகிறது. முறைகேடாக சம்பாதித்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கின்றனர். இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. எனவே, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக பூஜை செய்தேன். அதில், ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் ரத்த வாந்தி எடுத்து இந்த தேர்தலுடன் அவர்களின் சகாப்தம் முடிய வேண்டும்.

சுயேட்சை வேட்பாளரிடம் போலீசார் விசாரணை

இதற்காக, தத்தனேரி சுடுகாட்டில் உள்ள மயான காளி கோவிலின் சிறப்பு பூஜைகளை நடத்தி உள்ளேன் என்று தெரிவித்தார். இந்த பூஜை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், பல்வேறு தரப்பினரும் அதனை வேகமாக பரப்பி வருகின்றனர். இந்த விஷயமானது காவல்துறையின் காதுகளுக்கு எட்டிய நிலையில், சுயேட்சை வேட்பாளர் சங்கர பாண்டியனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன்.. விவசாயிகள், நெசவாளர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.