இந்தியாவில் மாறிவரும் வாழ்வியல் முறைகளால் கல்லீரல் நோய்கள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. வெறும் 500 ரூபாய்க்கும் குறைவான செலவில் செய்யப்படும் ஒரு எளிய ரத்தப் பரிசோதனை, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து உங்களைக் காப்பதோடு, லட்சக்கணக்கான ரூபாய் மருத்துவச் செலவையும் மிச்சப்படுத்தும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தக்கூடிய ஒரு விஷயத்தை, அலட்சியத்தால் முற்றிய நிலைக்குக் கொண்டு செல்வது பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துகிறது.
கல்லீரல் நோய்கள் ஏன் மௌனக் கொலையாளியாகக் கருதப்படுகிறது?நமது உடலில் கல்லீரல் என்பது மிகவும் உறுதியான ஒரு உறுப்பு. ஆனால், அந்த உறுதியின் பின்னணியில் ஒரு ஆபத்தும் ஒளிந்துள்ளது. கல்லீரல் 70% முதல் 80% வரை பாதிக்கப்பட்ட பின்னரே அதன் அறிகுறிகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். மஞ்சள் காமாலை, வயிற்றில் நீர் கோர்த்தல் அல்லது உட்புற ரத்தப்போக்கு போன்றவை ஏற்படும் போது, கல்லீரல் ஏற்கனவே கடுமையான பாதிப்பை (Cirrhosis) அடைந்திருக்கும். இந்தியாவில் கல்லீரல் செயலிழப்பு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 18 சதவீதமாக உள்ளது கவலைக்குரிய விஷயமாகும். மதுப்பழக்கம் மட்டுமின்றி, தற்போதைய காலத்தில் துரித உணவுகள் மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக ஏற்படும் ‘ஃபேட்டி லிவர்’ (Fatty Liver) பாதிப்பும் இதற்கு முக்கிய காரணமாகிறது.
சிகிச்சைச் செலவுகளும் பொருளாதார நெருக்கடியும்கல்லீரல் பாதிப்பு அதன் இறுதி நிலையை எட்டும் போது, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை (Liver Transplant) மட்டுமே ஒரே தீர்வாக அமைகிறது. இந்தியாவில் இதற்கான செலவு ரூ. 20 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை ஆகிறது. இது வெறும் அறுவை சிகிச்சைக்கான செலவு மட்டுமே. இதற்குப் பிறகு நோயாளி எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள், தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) கட்டணங்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புச் செலவுகள் என ஒரு நடுத்தரக் குடும்பத்தின் பொருளாதாரத்தையே இது நிலைகுலையச் செய்துவிடும். ஆரம்பத்திலேயே வெறும் 500 ரூபாயில் ‘லிவர் ஃபங்க்ஷன் டெஸ்ட்’ (LFT) செய்திருந்தால், இந்த இக்கட்டான நிலையைத் தவிர்த்திருக்க முடியும்.
Also Read: பயணிகளை கவரும் 8 காலத்தால் அழியாத நினைவுச் சின்னங்கள்
யாரெல்லாம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்?மருத்துவர்களின் கூற்றுப்படி, ஆரோக்கியமாக இருக்கும் நபர்கள் கூட ஆண்டுக்கு ஒருமுறை தங்களது கல்லீரலை பரிசோதித்துக் கொள்வது நல்லது. குறிப்பாக உடல் பருமன் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், அதிக மது அருந்துபவர்கள் மற்றும் ரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையின் படி அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும். ஹெபடைடிஸ் பி மற்றும் சி போன்ற வைரஸ் தொற்றுகளையும் ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் கல்லீரல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். மேலும், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயமும் அதிகம் என்பதால் விழிப்புணர்வு அவசியமாகிறது.