வட இந்திய மாநிலங்களில் சில இடங்களில் கட்டாய சட்டவிரோத மதமாற்ற மோசடிகள் நடப்பதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வருவதுண்டு. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள TCS அலுவலகத்தில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் தொடர்பான புகார்கள் எழுந்துள்ளமை நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த டிசிஎஸ் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர்கள் சிலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். குறிப்பாக, 18 முதல் 25 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் 2022-ஆம் ஆண்டு முதல் 2026 கால இடைவெளியில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தொடர்ச்சியான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக கூறியுள்ளனர்.
நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர்களை இஸ்லாம் மதத்திற்கு மாறச் சொல்லி வற்புறுத்தியதாகவும், அலுவலகத்தில் நமாஸ் செய்யக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அத்துடன், அவர்கள் இந்து தெய்வங்களைப் பற்றி அவதூறாகப் பேசியதாகவும், மத நம்பிக்கைகளைக் கேலி செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அலுவலகத்தில் வேலைசெய்யும் ஊழியர்களின் உடலை வர்ணிப்பது, குடும்ப விஷயங்களை விமர்சிப்பது, குழந்தை இல்லை என கேலி செய்வது, உடல் குறித்து கேலி, கிண்டல் செய்வது, இந்து மதத்தை இழிவாகப் பேசி, நம்பிக்கையை அவதூறாகப் பேசுவது போன்றவற்றை தொடர்ச்சியாக செய்து வந்துள்ளனர். இது தவிர, பெண் ஊழியர்கள் பலருக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் அளிக்கப்பட்டதாகவும், அவர்கள் தகாத முறையில் நடத்தப்பட்டதாகவும் புகாரில் பகீர் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த கட்டாய மதமாற்றம், பாலியல் தொந்தரவு போன்றவை குறித்து HR துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இங்கு மனிதவள மேலாளராக இருந்தவரும் குற்றஞ்சாட்ட நபர்களுக்கு துணையாக இருந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குற்றச்சாட்டு குறித்து ஆறு ஆண் ஊழியர்கள் மற்றும் இரண்டு பெண் ஊழியர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட ஒன்பது முதல் தகவல் அறிக்கைகளில் இந்தக் குற்றச்சாட்டுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதையடுத்து புகாரின்பேரில், இதுவரை ஹெச்.ஆர் மேலாளர் உட்பட 07-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், 'நிதா கான்' என்ற முக்கிய நபர் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா அரசு இந்த வழக்கைத் தீவிரமாக விசாரிப்பதற்காக 12 பேர் கொண்ட சிறப்புக் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்துள்ளது. அதேநேரத்தில், குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரையும் டிசிஎஸ் நிறுவனம் உடனடியாக வேலையை விட்டும் நீக்கியுள்ளது.
அத்துடன், விசாரணைக்கும் ஒத்துழைப்பதாக அறிவித்திருக்கிறது. மேலும், நிறுவனத்தின் உள்ளே முறையான பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டதா என்பதை ஆராய, டிசிஎஸ்ஸின் தலைமை செயல்பாட்டு அதிகாரி தலைமையில் தனி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.