சபரிமலை விவகாரம்; 'சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரில் ஒரு மதத்தின் அடிப்படை அல்லது சாரமான நடைமுறைகளை அகற்றிவிட முடியாது'; தலைமைநீதிபதி சூர்யகாந்த்..!
Seithipunal Tamil April 16, 2026 06:48 AM

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று  கடந்த 2018 செப்டம்பர் 28 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு, நாடு முழுவதும் பல்வேறு விவாதங்களும் போராட்டங்களும் நடைபெற்றன. இதையடுத்து,  2019 நவம்பர் 14 அன்று இந்தத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சுமார் 65 மறுஆய்வு மனுக்களை நீதிமன்றம் விசாரித்தது.

இதில், சபரிமலை மட்டுமின்றி மசூதிகளில் பெண்கள் நுழைவு, பார்சி பெண்கள் உரிமை போன்ற மதச் சுதந்திரம் சார்ந்த பெரிய கேள்விகள் இதில் அடங்கியுள்ளதால், இதை 07 அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது.

இதையடுத்து, சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்று 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களில் இருந்து எழும், அரசியலமைப்புச் சட்டக் கேள்விகளை விசாரிக்க அப்போதைய தலைமை நீதிபதி 09 எஸ்.ஏ. போப்டே தலைமையில் 09 நீதிபதிகள் கொண்ட அமர்வு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமைக்கப்பட்டது. ஆனாலும், கோவிட் பெருந்தொற்றின் காரணமாக இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை.

இந்நிலையில், 06 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையில் 09 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிலவும் கட்டுப்பாடுகள் மத நம்பிக்கையின் ஒரு பகுதி, 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை என்பது பெண்களை இழிவுபடுத்துவதற்கோ அல்லது தீட்டு போன்ற காரணங்களுக்காகவோ அல்ல; மாறாக, ஐயப்ப பகவானின் பிரம்மச்சாரி என்ற தனித்துவமான தன்மையை பாதுகாக்கவே இந்த மரபு என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது,

தற்போது இதுதொடர்பான விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு குறித்துப் பேசிய தலைமை நீதிபதி சூரியகாந்த், மத விவகாரங்களில் கோடிக்கணக்கான மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைகள் தவறானவை அல்லது பிழையானவை என்று ஒரு நீதிமன்றம் பிரகடனம் செய்வது மிகவும் சவாலான விஷயம். சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரில் ஒரு மதத்தின் அடிப்படை அல்லது சாரமான நடைமுறைகளை அகற்றிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இவரை தொடர்ந்து, தொடர்ந்து மற்றொரு நீதிபதி நாகரத்னா, சமூக நலம் மற்றும் சீர்திருத்தம் என்ற பெயரில் ஒரு மதத்தின் உள்ளடக்கத்தை நாம் வெறுமையாக்க முடியாது. எனத் தெரிவித்ததுடன் ஒரு விவகாரத்தில் சம்பந்தமே இல்லாத நபர்கள் தாக்கல் செய்யும் பொதுநல மனுக்களை மத விவகாரங்களில் அனுமதிப்பது குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "அத்தியாவசிய மத நடைமுறை" என்ற கோட்பாட்டை நீதிமன்றங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று வாதிட்டார். 

அதாவது, நீதிபதிகள் ஒரு மதத்தில் எது அத்தியாவசியம் எது அத்தியாவசியம் இல்லை என்று முடிவு செய்வது பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுக்கும் என்றும், சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு என்பது பாலினப் பாகுபாடு அல்ல, அது அங்குள்ள ஐயப்ப சுவாமியின் 'நித்ய பிரம்மச்சாரி' என்ற தனித்துவமான அடையாளத்துடன் தொடர்புடையது என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான, விசாரணை மீண்டும் நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.