இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS), தனது 2026-ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஓராண்டில் மட்டும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 23,460 பேர் குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. முன்னணி நிறுவனத்தில் இப்படி ஒரே ஆண்டில் இவ்வளவு ஊழியர்கள் குறைந்தது ஐடி துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், இது ஊழியர்கள் பணிநீக்கமா (Layoff) என்ற அச்சத்தையும் கிளப்பியுள்ளது.
இந்தச் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவள அதிகாரி (CHRO) சுதீப் குன்னும்மேல், இது திட்டமிட்ட பணிநீக்கம் அல்ல என்று மறுத்துள்ளார். கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிறுவன மறுசீரமைப்பு மற்றும் ஊழியர்கள் தாங்களாகவே பணியை விட்டு விலகியது (Attrition) போன்ற பல்வேறு காரணங்களால் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டில் 44,000 புதியவர்களைப் (Freshers) பணியில் சேர்த்துள்ளதாகவும், வரும் நிதியாண்டில் 25,000 புதிய வேலைவாய்ப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறி ஊழியர்களின் அச்சத்தைப் போக்கியுள்ளார்.