இந்தியாவுக்கு நெருக்கடி.. ரஷ்யா – ஈரான் எண்ணெய் இறக்குமதிக்கான அமெரிக்காவின் சலுகை ரத்து!
TV9 Tamil News April 16, 2026 03:48 PM

உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் மீது விதிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் இறக்குமதி தடைகளில் வழங்கி வந்த “விலக்கு” அல்லது “சலுகைகளை” இனி நீட்டிக்கப் போவதில்லை என அமெரிக்கா அதிரடியாகத் தீர்மானித்துள்ளது. இந்த முடிவு, உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியாவிற்குப் பெரும் பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: மீண்டும் போர் வாய்ப்பு?! தோல்வியில் முடிந்த அமெரிக்கா- ஈரான் பேச்சுவார்த்தை.. நடந்தது என்ன?

அமெரிக்காவின் இந்த முடிவுக்குக் காரணம் என்ன?

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள், ரஷ்யாவின் போர்ச் செலவுகளுக்கான வருவாயைக் கட்டுப்படுத்தத் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. உக்ரைன் போரைத் தொடர்வதற்கு ரஷ்யா ஈட்டும் எண்ணெய் வருவாயே முக்கியக் காரணமாக இருப்பதால், அதன் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா விரும்புகிறது. மத்திய கிழக்கில் ஈரானின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த, அதன் எண்ணெய் ஏற்றுமதியை முடக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதுவரை சில நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த தற்காலிக விலக்கு காலாவதியாகிறது, இதனை இனி நீட்டிக்கப் போவதில்லை என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்புகள்:

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80%-க்கும் அதிகமானவற்றை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. அமெரிக்காவின் இந்த முடிவால் இந்தியா பல்வேறு சவால்களைச் சந்திக்கலாம். சலுகை விலையில் கிடைத்து வந்த ரஷ்ய எண்ணெய் நிறுத்தப்பட்டால், இந்தியா அதிக விலை கொடுத்து வேறு நாடுகளிடம் எண்ணெய் வாங்க வேண்டியிருக்கும். இது உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தக்கூடும். தடைகள் அமலுக்கு வந்தால், ரஷ்யா மற்றும் ஈரானுக்கு டாலர் மூலம் பணம் செலுத்துவதில் சர்வதேச வங்கிச் சிக்கல்கள் ஏற்படும். அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்த விரும்பும் அதே வேளையில், தனது எரிசக்தி தேவையை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. தடைகளை மீறி எண்ணெய் வாங்கினால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு:

இந்தியா தனது “தேசிய நலனே முதன்மையானது” என்ற கொள்கையில் உறுதியாக உள்ளது. குறைந்த விலையில் எண்ணெய் கிடைப்பது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமானது என்பதால், ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கி வருகிறது. ஆனால், அமெரிக்காவின் இந்த புதிய கட்டுப்பாடுகள் இந்தியாவின் இந்த மூலோபாயத் தன்னாட்சியை சோதிப்பதாக அமையும்.

இதையும் படிக்க: தற்காலிக போர் நிறுத்தத்த்தை நீட்டிக்க அமெரிக்கா – ஈரான் பரிசீலனை?

எதிர்கால எதிர்பார்ப்பு:

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்கனவே ஏறுமுகத்தில் உள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு உலகப் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா தனது இறக்குமதியை வளைகுடா நாடுகளுக்கு மாற்ற முயற்சி செய்தாலும், குறுகிய காலத்தில் இது பெரிய பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.