தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமன் (46) என்பவர் தற்போது கோவை கணபதி பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஜியோ டிஜிட்டல் நிறுவனத்தில் பகுதி மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், பீளமேடு அருகே ஹோப் காலேஜ் பகுதியில் செயல்பட்டு வரும் ஜியோ ஸ்டோரில் திடீரென விலை உயர்ந்த 6 செல்போன்கள் மர்மமான முறையில் காணாமல் போனது கடை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத ஒருவர் கடைக்குள் நுழைந்து செல்போன்களை கையாடல் செய்து கொண்டு சென்றது தெளிவாக பதிவாகியிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ராமன், கடையின் மேலாளர் முருகன் என்பவரிடம் உடனடி விசாரணை மேற்கொண்ட போது, அவர் அளித்த விளக்கங்களில் முரண்பாடுகள் காணப்பட்டதால் சந்தேகம் மேலும் வலுத்தது.
இதனைத் தொடர்ந்து பீளமேடு காவல் நிலையத்தில் ராமன் புகார் அளித்தார். அதன் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிரமான விசாரணையை முன்னெடுத்தனர்.
விசாரணையின் போது கடை மேலாளர் முருகன் தனது நண்பர்களான சுந்தராபுரத்தைச் சேர்ந்த வினு பிரசாத் (34), அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (44) ஆகியோருடன் சேர்ந்து இந்த விலை உயர்ந்த செல்போன்களை திட்டமிட்டு திருடியதாக அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மூவரையும் காவலர்கள் கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அழைத்து சென்று பின்னர் சிறையில் அடைத்தனர்.