மறுவரையறை மசோதாவை எரித்த முதல்வர் ஸ்டாலின்.. தமிழகம் முழுவதும் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்..!
Webdunia Tamil April 16, 2026 01:48 PM

மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுவதை கண்டித்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நாமக்கல்லில் கருப்புச் சட்டை அணிந்து, கருப்புக்கொடி ஏற்றி, அந்த மசோதாவை எரித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். மத்திய அரசு கொண்டு வரவுள்ள 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா, மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543-லிருந்து 850 வரை அதிகரிக்க வகை செய்கிறது.

இந்த தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை கடுமையாக பாதிக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, மக்கள் தொகை அதிகரித்துள்ள வட மாநிலங்களுக்கு அதிக இடங்களும், மக்கள் தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு குறைவான இடங்களும் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என தமிழக அரசு கருதுகிறது.

மகிளா சக்தி அபியான் மூலம் 2029-ஆம் ஆண்டு முதல் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதன் பின்னணியில் இந்த மறுவரையறை கொண்டுவரப்படுகிறது. முதல்வரின் அழைப்பை ஏற்று தமிழகம் முழுவதும் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.