தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கிய தளபதி விஜய், தற்போது சினிமாவை விட்டு விலகி தனது முழு கவனத்தையும் அரசியலில் செலுத்தி வருகிறார். இந்த இந்த நிலையில், மூத்த நடிகர் ராதாரவி ஒரு பேட்டியில் விஜய் குறித்து பகிர்ந்துகொண்ட பழைய சம்பவம் ஒன்று தற்போது இணையத்தில் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.
அந்தப் பேட்டியில் பேசிய ராதாரவி, ஒருமுறை படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது விஜய் தன்னிடம் நடந்துகொண்ட விதத்தை மிகவும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். அன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை மட்டும் தனியாக அழைத்த விஜய், அண்ணே தப்பா நினைச்சுக்காதீங்க.. உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்' என பேசத் தொடங்கினார். நான் அவரிடம், எதுவானாலும் பரவாயில்லை தம்பி, தாராளமாகக் கேளுங்கள் என்று கூறினேன்.
அப்போது விஜய், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நடந்த அந்த சம்பவத்திற்குப் பிறகு, உங்களது மனநிலை எப்படி இருந்தது? அந்த இக்கட்டான காலகட்டத்தையும், பதற்றமான சூழலையும் உங்கள் குடும்பத்தினர் எப்படி எதிர்கொண்டீர்கள்? என்று மிகவும் அக்கறையோடு விசாரித்தார். அவர் அப்படி ஒரு கேள்வியைக் கேட்பார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்தத் தருணத்தை நான் என் வாழ்நாளில் ஒருபோதும் மறக்கவே மாட்டேன், என்று ராதாரவி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பொதுவாக என்னைப் பார்க்கும் பலரும், உங்க அப்பா ஏன் எம்.ஜி.ஆருக்கு அப்படிச் செய்தார்? என்று ஒருவித விமர்சனத்துடன்தான் கேட்பார்கள். ஆனால், அந்தச் சம்பவத்தால் மறுபுறம் பாதிக்கப்பட்ட எங்கள் குடும்பத்தின் வலியைப் புரிந்துகொண்டு, முற்றிலும் மனிதநேயத்தோடு என்னிடம் அதைப் பற்றி அக்கறையாகக் கேட்ட ஒரே நபர் விஜய்தான். அதுதான் அவருடைய உண்மையான குணம் என ராதாரவி நெகிழ்ந்துபோய் கூறினார்.
அரசியல் களத்தில் தீவிரம் காட்டி வரும் விஜய்யின் இந்த மனிதநேயமிக்க குணத்தைப் பார்த்து, அவரது ரசிகர்களும் திரையுலகினரும் இந்தத் தகவலை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.