“ஹால்மார்க் அலுவலகத்தை எப்படி கையகப்படுத்த முடியும்? அரைவேக்காட்டுத்தனமாக பேசாதீங்க” - செந்தில் பாலாஜி
Top Tamil News April 16, 2026 08:48 PM

ஹால்மார்க் நிறுவனம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. அது தெரியாமல் கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அரைவேக்காடு தரமான குற்றச்சாட்டுகளுக்கு எப்படி பதில் அளிக்க முடியும்? என கரூரில் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒன்றிய அரசின் தொகுதி மறு வரையறைக்கு எதிராக கரூர் திமுக மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தலைமையில் மசோதா நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, “ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து திட்டங்களை மறுத்து வருகிறது. தற்போது தொகுதி மறு வரையறை மசோதா என்ற பெயரில் தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் போராட்டம் நடத்தியுள்ளார். பாஜக அரசு தமிழக மக்களின் குரல்வலை, மாநிலங்களின் பிரநிதித்துவத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதற்கு தமிழக மக்கள் நிச்சயமாக பதில் தருவார்கள். வெண்ணைமலை கோவில் இனாம் நிலப்பிரச்சனை என்பது அதிமுக ஆட்சியில் வந்தது. இனாம் நிலத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் பாஜக தொடர்பு அமைப்பை சேர்ந்தவர்.

அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் முறையாக மனு தாக்கல் செய்யாமல், தவறான ஆவணங்களை தாக்கல் செய்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு டி.ஆர்.ஓ-க்கள் கொண்ட அதிகாரிகளை நியமனம் செய்து, குழு அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் நில பிரச்சனைக்கு மீண்டும் அமைய உள்ள திமுக ஆட்சியில் நிரந்தர தீர்வு காணப்படும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் செய்யும் பொய் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம். வழக்கை நடத்துபவர் யார்? என்பது உங்களுக்கும் தெரியும். எனவே, ஊடகங்களும் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும். மே 4ம் தேதி பாருங்க. நல்ல முடிவை மக்கள் வழங்குவார்கள். கரூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 4 தொகுதிகளிலும் திமுக நிச்சயமாக வெற்றி பெறுவோம். வருமான வரி சோதனை என்பது புகாரின் பேரில் வருவது, வழக்கமான ஒன்று. தேர்தலுக்குப் பிறகு அந்த சோதனை எப்படி நடந்தது என்பது தெரிந்துவிடும். 5 ஆண்டுகளில் திமுக அரசின் சாதனை திட்டங்கள் கொண்ட பட்டியல் வெளியிட்டு எங்களது வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் எதிர்கட்சியினர் அவர்கள் செய்த திட்டங்களை முன்னெடுக்காமல், தவறான தகவல்களை சொல்லி, தனிநபர் தாக்குதல் மூலம் பிரச்சாரம் செய்கின்றனர்” என்றார்.

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி Hallmark அலுவலகத்தை தனிநபர் எப்படி கையகப்படுத்த முடியும். அது ஒன்றிய அரசின் அனுமதி பெற்ற நிறுவனம். ஹால்மார்க் நிறுவனம் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதே தெரியாமல், அரவேக்காட்டு தனமான குற்றச்சாட்டுகளுக்கு எப்படி பதில் சொல்ல முடியும் என்றார். வரும் 18ஆம் தேதி கரூர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் எனவும் தெரிவித்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.