விஜய்யின் ஜனநாயகன் படம் கடந்த சில நாள்களுக்கு முன் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகியிருந்தது. இது சம்பந்தமாக படக்குழு சார்பில் சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சைபர் க்ரைமின் விசாரணையில் படத்தை லீக் செய்தது யார் என கண்டுபிடிக்கப்பட்டு, அந்த நபர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார்.
ஜனநாயகன்
இது தொடர்பாக சைபர் க்ரைம் வெளியிட்டிருக்கும் பத்திரிகைச் செய்தியில், 'ஜனநாயகன் லீக் விவகாரமாக சைபர் க்ரைமின் விசாரணையில் ஏற்கெனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் 3 பேர் இந்த விவகாரம் சம்பந்தமாக கைது செய்யப்பட்டனர்.
படத்தை லீக் செய்ததில் முக்கியமான குற்றவாளி ஒரு ஃப்ரீலான்ஸ் எடிட்டர். அவர் வேலை பார்த்த ஸ்டூடியோவிலிருந்து ஜனநாயகன் படத்தின் காட்சிகளை திருடி, அதை சக குற்றவாளிகளுடன் பகிர்ந்திருக்கிறார். அதன் பிறகே படம் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டிருக்கிறது. இணையத்தில் பரவியிருக்கும் படத்தின் சட்டவிரோத லீக்கை பொதுமக்கள் யாரும் பகிர வேண்டாம். அது தண்டனைக்குரிய குற்றமாகும்' எனக் கூறப்பட்டிருக்கிறது.
ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக லீக் ஆனதில் படக்குழுவும் விஜய் ரசிகர்களும் கடும் அதிருப்தியடைந்திருந்தனர். படத்தை யார் ரிலீஸ் செய்திருப்பார் எனும் குழுப்பத்திலும் இருந்தனர். இப்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.