மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, உலகம் முழுவதும் மேலும் பல கோடி மக்கள் பட்டினியால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் இந்தர்மிட் கில் எச்சரித்துள்ளார். ஏற்கனவே 30 கோடி மக்கள் கடும் உணவு தட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இந்த மோதல்களால் உரங்களின் விலை உயர்ந்து உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என்றும், இதனால் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 20 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக எண்ணெய் விநியோகப் பாதைகள் பாதிக்கப்படுவதால், விவசாயத்திற்கான இடுபொருட்களின் விலை உயர்ந்து உணவுப் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.இந்த நெருக்கடி தொடர்ந்தால் நாடுகள் தங்கள் உணவு ஏற்றுமதியை நிறுத்திவிட்டு, உள்நாட்டுத் தேவைக்காக உணவைச் சேமிக்கத் தொடங்கும், இது உலக சந்தையில் உணவு விலையை இன்னும் அதிகமாக்கும்.
தற்போது ஆசிய நாடுகளில் இதன் பொருளாதாரத் தாக்கம் தென்பட்டாலும், போர் நீடித்தால் ஆப்பிரிக்கா போன்ற பலவீனமான நாடுகளை இது மிக மோசமாகப் பாதிக்கும் என்று அவர் விளக்கியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் உள்ள ஏழை மக்கள் மற்றும் குழந்தைகளே இந்த உணவுப் பற்றாக்குறையால் முதன்மையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதால், சர்வதேச சமூகம் இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.