2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவருக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பில் பெரும் குளறுபடிகள் நடப்பதாக அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். “எங்கள் தலைவரைப் பார்க்க வரும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் அளவுக்குத் தமிழகக் காவல்துறையிடம் போதிய வசதிகளோ, மனித வளமோ இல்லை” என்று அவர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
விஜய்யின் பிரசார வாகனத்தைச் சுற்றிப் போதுமான போலீஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை இல்லாத காரணத்தால், பிரசார வேன் பல இடங்களில் ஸ்தம்பித்து நின்றதை அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்டதாக அவர் விளக்கமளித்தார். இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ள தவெக, ஆளுங்கட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திப் பிரசாரத்தைத் தடுக்க முயற்சிப்பதாகக் கூறி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.