தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்காதது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே அவர் தவெக-வில் அதிருப்தியில் இருப்பதாகவும், கட்சியை விட்டு விலகப் போவதாகவும் எம்.ஆர். விஜயபாஸ்கர் போன்ற மாற்று முகாமினர் விமர்சித்து வந்த நிலையில், இந்த வதந்திகளுக்கு செங்கோட்டையன் தரப்பு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தவெக-வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட அதே நேரத்தில், செங்கோட்டையன் ஈரோடு மாவட்டத்தில் தனது கோட்டையான கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தவெக வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததே அவர் சென்னை வராததற்குக் காரணம் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
“கட்சியில் எவ்வித அதிருப்தியும் இல்லை, தேர்தல் பணிகள் காரணமாகவே விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை” என்று கே.ஏ.எஸ் ஆதரவாளர்கள் விளக்கமளித்துள்ளதால், கடந்த சில நாட்களாக நிலவி வந்த ‘விலகல்’ வதந்திகள் தற்போது ஓய்ந்துள்ளன.