கேஸ் தட்டுபாடால் ஆட்டோ ஓட்டுநர்கள் அவதி.. பெரம்பூர் வேட்பாளர் திலகபாமா கொடுத்த வாக்குறுதி..
TV9 Tamil News April 17, 2026 05:48 PM

சென்னை, ஏப்ரல் 17, 2026: 2026 சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள சூழலில், பிரச்சாரம் 21ஆம் தேதி நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் சூறாவளி சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டு, சட்டமன்றத் தொகுதிகள் தோறும் சென்று மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று தொடர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம. திலகபாமா, தனது பரப்புரையின் ஒரு பகுதியாக இன்று காலை வியாசர்பாடியில் உள்ள எம்.கே.பி. நகரில் பெட்ரோல் பங்கில் ஆட்டோ ஓட்டுநர்களைச் சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.

கேஸ் தட்டுபாடால் ஆட்டோ ஓட்டுநர்கள் அவதி:

அப்போது, கேஸ் தட்டுப்பாடு காரணமாக தங்களது வாழ்வாதாரம் முழுமையாக முடங்கிவிட்டதாகவும், ஆட்டோவிற்கு எரிபொருள் நிரப்புவதற்காக தினமும் 3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்தனர்.

போர் காரணமாக எரிபொருள் போக்குவரத்து முடங்கியுள்ளதால், இன்னும் 4 மாதங்களுக்கு நிலைமை இப்படியே நீடிக்கும் என ஆட்டோ ஓட்டுநர்களிடம் எடுத்துரைத்த திலகபாமா, கொரோனா காலத்தைப் போல நமக்குள் நாமே உதவிக்கொண்டு இந்த இக்கட்டான நிலையை சமாளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க: கரூரில் பரபரப்பு.. செந்தில் பாலாஜி நண்பர் வீடு – அலுவலகத்தில் திடீர் சோதனை.. அதிரடியாக களமிறங்கிய வருமான வரித்துறை!

குறைகளை கேட்டறிந்த திலகபாமா:

தொடர்ந்து, வருமானம் குறித்து வேதனை தெரிவித்த ஆட்டோ ஓட்டுநர்களிடம், தினசரி உங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் பாதி அளவிற்காவது அரசு உதவினால் நன்றாக இருக்கும்; அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன் என்றார். மேலும், “என்னை எப்போது வேண்டுமானாலும் நேரில் சந்தித்து உங்களது குறைகளை தெரிவியுங்கள்; உடனடியாக அதற்கான தீர்வு கிடைக்க உதவுகிறேன்” என உறுதியளித்தார்.

மேலும் படிக்க: விஜய்யை இமை போல காக்கும் 6 அடி உயர மனிதன்.. 360 கோணத்தில் சுழலும் பாதுகாப்பு அரண்.. யார் இந்த நயீம் மூசா!

தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேசிய திலகபாமா, “மிகவும் கஷ்டப்படும் 200 ஆட்டோ ஓட்டுநர்களின் குழந்தைகளின் கல்விச்செலவை நான் ஏற்கிறேன்” என உறுதியளித்தார். மேலும், இரவு நேரங்களில் கேஸ் நிரப்புவதற்காக வரிசையில் நிறுத்தப்படும் ஆட்டோக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும் காவல்துறையிடம் கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.