மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதம் மக்களவையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
விவாதங்களுக்கு பிறகு இன்று (ஏப்ரல்.17) மாலை வாக்கெடுப்பு நடைபெறும். அவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை என்பதால் நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் நாடாளுமன்றத்தில் பேசிய கனிமொழி, " தொகுதி மறுவரையறை குறித்து எங்களுக்கு தெளிவான விளக்கம் தேவை. மசோதாவில் கூறப்படுவதும், அமித்ஷா கூறுவதும் ஒன்றாக இல்லை.
கடைசியாக வெளிவந்த மக்கள் தொகை அடிப்படையில்தான் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என மசோதாவின் பிரிவு 4-ல் கூறப்பட்டுள்ளது.
அதன்படி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை குறையும். கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் எண்ணிக்கையை தீர்மானிக்கலாமா?
மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 850- ஆக உயர்த்தப்பட்டால், பேச கூட வாய்ப்பு கிடைக்காது.
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு தண்டனையா? எம்.பி.க்கள் எண்ணிக்கை 850 ஆக உயரும் போது, எதிர்காலத்தில் தென் மாநிலங்களில் இருந்து ஒரு வாக்கு கூட இல்லாமல் அரசியல் சாசனத்தை திருத்திவிட முடியும்.
குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதில்கூட, தெற்கு மாநிலங்களுக்கு பங்களிப்பே இருக்காது. பாஜக சொந்த சதித் திட்டத்தை நாட்டின் மீது சுமத்துவதற்காகவே தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது.
பெரும்பான்மை உள்ள கட்சி விருப்பம் போல் தொகுதி மறுவரையறையை செய்து நாட்டினுடைய அரசியல் சூழலையே மாற்ற முடியும். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்" என்று பேசியிருக்கிறார்.