நெருங்கும் தேர்தல் திருவிழா... இன்று சென்னையில் 18,971 காவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு!
Dinamaalai April 18, 2026 10:48 AM

தமிழகத்தில் தேர்தல் திருவிழா நெருங்கும் நிலையில், இன்று சென்னையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 20 ஆகிய 2 நாட்களில் காவலர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நாளில் பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டியுள்ளதால், காவலர்களுக்கு இந்த முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் மொத்தம் 18,971 காவலர்கள் தபால் வாக்கு செலுத்தத் தகுதி பெற்றுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் முதல் கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி அன்று 9,703 காவலர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய உள்ளனர். இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 20-ம் தேதி அன்று 9,268 காவலர்கள் தபால் வாக்களிக்கத் தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

காவலர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் அந்தந்த காவல் மாவட்டத் தலைமையகங்களில் இதற்கெனத் தனி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களுக்குச் சென்று தடையின்றி வாக்களிக்க ஏதுவாக உயர் அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில் பொதுமக்களுக்கு முன்னோடியாகக் காவலர்கள் இந்தத் தபால் வாக்குப்பதிவில் ஆர்வத்துடன் பங்கேற்க உள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.