கனடா கிரிக்கெட் அணியை மிரட்டியுள்ள பிரபல லாரன்ஸ் பிஷ்னோய் 'கேங்ஸ்டார்' கும்பல்; மரணபயத்தில் அதிகாரிகள்..!
Seithipunal Tamil April 19, 2026 05:48 AM

கனடா கிரிக்கெட் அணியை, பிரபல லாரன்ஸ் பிஷ்னோய் 'கேங்ஸ்டார்' கும்பல் மிரட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல் காரணமாக கனடா கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மரண பயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

மிகப்பெரிய குற்றப் பின்னணி கொண்ட லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான கும்பல், மிரட்டிப் பணம் பறிப்பது, கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதச் செயல்கள் ஈடுபடும் கும்பல். தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் கால் பதித்துள்ளனர். குறித்த கும்பல் உலகம் முழுவதும் உள்ள மாஃபியாக்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, கனடாவிலும் இந்த கும்பலுக்குத் தொடர்புடைய மாஃபியாக்கள் இருக்கின்றனர். இந்தக் கும்பல் தற்போது கனடா நாட்டு கிரிக்கெட் அதிகாரி ஒருவருக்கு மிரட்டல் விடுத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'ஊழல், குற்றம் மற்றும் கிரிக்கெட்' என்ற தலைப்பில் கனடாவில் ஓர் ஆவணப்படம் வெளியானது. சிபிசியின் 'தி ஃபிஃப்த் எஸ்டேட்' நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்த ஆவணப்படம், கனடா கிரிக்கெட்டின் மூத்த அதிகாரிகள் நிர்வாகம், அணித் தேர்வு மற்றும் பலவற்றில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டுகிறது. குறிப்பிட்ட பதவிகளில் உள்ள கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் வீரர்களின் தேர்வில் பிஷ்னோய் கும்பலின் செல்வாக்கு இருந்ததாக குறித்த ஆவண படம் எடுத்துரைக்கிறது.

கனடாவின் தேசிய அணியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், ஒரு குறிப்பிட்ட வீரரை கவனித்துக் கொள்ள தவறினால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தப்பட்டதாகக் அதிர்ச்சி தகவல் இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

அதாவது, பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள ஓர் உணவகத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தின் போது, அந்த அதிகாரியிடம், ”குறிப்பிட்ட சில வீரர்களை அணியில் இருந்து நீக்கக் கூடாது, அப்படி நடந்தால் உங்கள் உயிருக்கு பெரிய ஆபத்து ஏற்படும். அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மிரட்டியதாக தெரிவித்துள்ளது.

இதனால் பயத்தில் உறைந்து போயுள்ள அந்த கிரிக்கெட் அதிகாரி போலீஸ் பாதுகாப்பைக் கோரியுள்ளார். அத்துடன், மற்றொரு மூத்த அதிகாரியின் வீட்டின் அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தபட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்தக் கும்பலின் அழுத்தத்தால்தான், கடந்த டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே திடீரென கேப்டன் மாற்றப்பட்டதாகக் தற்போது கூறப்படுகிறது.

அதாவது, அனுபவ வீரர் நிக்கோலஸ் கர்டன் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தில்பிரீத் பாஜ்வா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே டி20 உலகக்கோப்பைத் தொடரில் கனடா பங்கேற்ற டி20 போட்டிகள் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், கிரிக்கெட்டிலும் பயங்கரவாதக் கும்பலின் தலையீடு இருப்பது கிரிக்கெட் உலகைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த விவகாரத்தால் கனடா கிரிக்கெட் அமைப்பு ஒரு புதிய சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. எனினும், இந்த மிரட்டல் விவகாரம் தொடர்பாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள டெல்டா நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.