`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது' - அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்
Vikatan April 20, 2026 01:48 PM

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடந்த போர் ஒன்றரை மாதத்திற்கு பிறகு தற்காலிகமாக முடிவுக்கு வந்து இருக்கிறது. ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தமும் விரைவில் முடிய இருக்கிறது. ஈரானுடன் மீண்டும் எப்போது அமெரிக்கா பேச்சுவார்த்தை நடந்தும் என்று தெரியாமல் இருக்கிறது. இப்பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் ஏற்பாடு செய்து வருகிறது. பேச்சுவார்த்தையில் பிரதான பிரச்னையாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடி இருக்கிறது. மற்றொருபுறம் ஈரான் துறைமுகத்திற்குள் கப்பல்கள் செல்ல முடியாமல் அமெரிக்கா தடங்கல் செய்துள்ளது.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் உள்ள முக்கிய முட்டுக்கட்டை குறித்து ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்று வரும் முகமது பாகர் காலிபாஃப் கூறுகையில், ''நாங்கள் உறுதியாக நிற்கும் சில விவகாரங்கள் உள்ளன.

ஹார்மூஸ் ஜலசந்தி

அவர்களுக்கும் சிலவற்றில் உறுதியாக இருக்கின்றனர். ஆனால், இந்த விவகாரங்கள் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே இருக்கலாம். நாங்கள் முன்னேற்றம் கண்டுள்ளோம். இருப்பினும், எங்களுக்கு இடையே இன்னும் ஒரு பெரும் இடைவெளி நிலவுகிறது," என்றும் அவர் தெரிவித்தார்.

ஹார்மூஸ் ஜலசந்தி பிரச்னையில் இருநாடுகளும் முட்டிக்கொண்டாலும், ஈரானுடனான பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்து கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அணுசக்தி பிரச்னை மற்றும் ஹார்மூஸ் ஜலசந்திக்கு பாதுகாப்பு கொடுப்பது ஆகிய இரண்டு பிரச்னைகள் தான் இரு நாடுகளிடையே பிரதானமாக இருப்பதாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் ஈரான் விட்டுக்கொடுக்காமல் இருந்து வருகிறது.

ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்திற்கான விதிகள் மற்றும் பாதுகாப்பை நாங்கள்தான் கவனிப்போம் என்று ஈரான் திட்டவட்டமாக கூறி வருகிறது. இதனால் இரு நாடுகளிடையே முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. நேற்று ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக வந்த இரண்டு இந்திய கப்பல்களை ஈரான் படையினர் படகுகளில் வந்து சுட்டனர். இதையடுத்து அக்கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியை கடக்காமல் திரும்ப சென்றுவிட்டன. இப்பிரச்னை குறித்து இந்தியாவில் உள்ள ஈரான் தூதரை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.

சிறிய தவறு செய்தாலும் தாக்குவோம்

போர்நிறுத்தம் நீட்டிக்கப்படுமா மற்றும் பேச்சுவார்த்தை தொடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் போருக்கும் ஈரான் தயாராகி வருகிறது. அமெரிக்காவும் கூடுதல் படைகளை மத்திய கிழக்கில் கொண்டு வந்து குவித்து வருகிறது. இதையடுத்து இது குறித்து ஈரான் சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறுகையில், ``ஈரானின் எதிரிகள் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தினால், அதற்குப் பதிலடி கொடுக்க தெஹ்ரான் தயாராக இருப்பதாக" எச்சரித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், ''அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான தற்போதைய மோதல் சூழலில், ஈரான் தனது இராணுவத் தயார்நிலையை வலுப்படுத்திக்கொண்டுள்ளது. நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம்.

அவர்கள் மிகச்சிறிய தவறை இழைத்தாலும், நாங்கள் பலத்தைப் பயன்படுத்திப் பதிலடி கொடுப்போம். மூன்றாவதாக எங்கள் மீது திணிக்கப்பட்ட போரின்போது, தாக்குதல் திறன்கள் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் கடந்த காலத்தை விட நாம் நிச்சயமாகப் பல படிகள் உயர்ந்து நிற்கிறோம்; போர்க் களத்திலேயே நாம் இதனை நேரில் கண்டோம். ராணுவ ரீதியாக நாம் அமெரிக்காவை விட வலிமையானவர்கள் அல்ல. அவர்களிடம் அதிக பணமும், தளவாடங்களும், வளங்களும் உள்ளன என்பது தெளிவாகிறது.

மேலும், உலகம் முழுவதும் அவர்கள் பல ஆக்கிரமிப்புச் செயல்களை முன்னெடுத்துள்ளதால், நம்மை விட அவர்களுக்கு அனுபவமும் அதிகம். நாங்கள் ஒரு சமச்சீரற்ற போரில், எங்களின் சொந்த வடிவமைப்பு மற்றும் தயார் நிலையுடன் எதிரியைப் பின்னுக்குத் தள்ளும் வகையில் போரிட்டோம். எதிரியிடம் பணமும் வளங்களும் இருந்தன, ஆனால் அவர்கள் திட்டமிடுவதில் சரியாகச் செயல்படவில்லை''என்று தெரிவித்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.