சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி பிரச்சாரத்தில் விஜய் பேசியது பரவலாக கவனமீர்த்துள்ளது. அதிமுக , திமுக , பாஜக என மூன்று அரசியல் கட்சிகளையும் விஜய் கடுமையாக விமர்சித்து பேசினார். இறுதிகாக அக்னி நட்சத்திரத்தையும் திமுகவையும் ஒப்பிட்டு விஜய் பேசியது குறித்து நடிகை விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
தமிழகத்தில் நாளை ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் இறுதியாக சென்னை நந்தனத்தில் தனது பிரச்சாரத்தை முடித்தார். திமுக , அதிமுக , பாஜக என மூன்று அரசியல் கட்சிகளையும் சரமாரியாக விஜய் தனது பிரச்சாரத்தின் போது விமர்சித்து பேசினார்.
தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் நாளன்று அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. சூரியன் பட்டால் சன் ஸ்ட்ரோக் வரும். எப்போதுதான் இந்த சூரியன் மறையும், எப்போதுடா இந்த சூரியன் ஒழியும் என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூரியனை வெறுத்து ஒதுக்குவார்கள். அதுதான் தேர்தல் முடிவுகளுக்கான அறிகுறி. ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி’’ என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்" என்று விஜய் பேசினார்.
"சூரியனை உதாரணமாக வைத்து விஜய் பேசியது குறித்து நடிகையும் திமுக ஆதரவாளருமான விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். " பெரியாரை பின்பற்றுபவர் என்று சொல்லிக்கொண்டு நீங்கள் மூட நம்பிக்கையை மக்களிடம் சர்வசாதாரணமாக முன்வைத்ததை நான் கவனித்தேன். உங்களது அரசியல் லாபத்திற்காக வாழ்வின் ஆதாரமான சூரியனை ஒரு தூக்கியெறியப்பட வேண்டிய ஒரு விஷயமாக நீங்கள் பேசியது மூடத்தனமானது. உங்களது அரசியல் எதிரிகளை விமர்சனம் செய்யுங்கள். ஆனால் தெளிவுடனும் பொறுப்புணர்வோடும் செய்யுங்கள். உங்களுடைய வசீகரம் நிகரற்றது. ஆனால் அதற்காக நீங்கள் அர்த்தமில்லாமல் பேச முடியாது. பாத்த்து சார் இயற்கை ரொம்ப பொல்லாதது. இன்னும் கரூர் கணக்கே முடியல. புதுசு புதுசா புரட்சி பண்ணாதிங்க." என விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.