"தான் உயிரியல் தந்தை இல்லை என்றால் குழந்தைக்கு பராமரிப்புத் தொகை கொடுக்கவேண்டாம்" - சுப்ரீம் கோர்ட்
Vikatan April 23, 2026 02:48 PM

கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் போது ஆண்கள் தங்களது மாஜி மனைவி மற்றும் குழந்தைகளுக்குப் பராமரிப்புத் தொகை கொடுக்க வேண்டும்.

சில நேரங்களில் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கூறி ஆண்களில் சிலர் குழந்தைகளுக்குப் பராமரிப்புத் தொகை கொடுக்க முடியாது என்று கூறுவதுண்டு.

சுப்ரீம் கோர்ட்டில் அது போன்ற ஒரு மனு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே அப்பெண் தனக்கும், தனது மகளுக்கும் பராமரிப்புத் தொகை கொடுக்க வேண்டும் என்று கோரி கீழ் கோர்ட் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றம் போன்றவற்றில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

இவ்வழக்கு கீழ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டபோது குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்றும், குழந்தைக்கு டி.என்.ஏ சோதனை நடத்தவேண்டும் என்றும் அப்பெண்ணின் கணவர் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கோர்ட் குழந்தைக்கு டி.என்.ஏ.சோதனை நடத்த உத்தரவிட்டது. அதில் குழந்தை சம்பந்தப்பட்ட ஆணிற்குப் பிறந்தது இல்லை என்று தெரிய வந்தது.

இதையடுத்து குழந்தைக்குப் பராமரிப்புத் தொகை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை கோர்ட் நிராகரித்தது. அதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அப்பெண் மேல் முறையீடு செய்து இருந்தார். ஆனால் டெல்லி உயர் நீதிமன்றமும் அப்பெண்ணின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இதையடுத்து அப்பெண் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

இம்மனு நீதிபதிகள் சஞ்சய் மற்றும் கோடேஸ்வர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் அப்பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், உயிரியல் ரீதியாகத் தனக்கு பிறக்காத ஒரு குழந்தைக்கு ஒரு ஆணை பராமரிப்புத் தொகை செலுத்தும்படி கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஆண் அக்குழந்தையின் தாயைத் திருமணம் செய்துகொண்ட பிறகு அக்குழந்தை பிறந்திருந்தாலும் கூட, இவ்விதி பொருந்தும். எனினும், இவ்விதி நடைமுறைக்கு வர வேண்டுமெனில், அக்குழந்தைக்கு அந்த ஆண் தந்தை அல்ல என்பதை நிரூபிக்க வேண்டியது அவசியமாகும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் குழந்தைக்கு டி.என்.ஏ.சோதனை நடத்தப்பட்டு இருப்பதையும், அதன் முடிவு அறிக்கைக்கு குழந்தையின் தாய் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டினர்.

"ஐஸ்வர்யா ராய்தான் என் உயிர்த்தோழி" - விவாகரத்து வதந்திகளுக்கு அபிஷேக் பச்சன் பதிலடி!
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.