ஈரோட்டு கிழக்கு தொகுதியில் கள்ள ஓட்டு குற்றச்சாட்டு… இளைஞருக்கு சேலஞ்ச் ஓட்டு.. பெரும் பரபரப்பு!
TV9 Tamil News April 23, 2026 03:48 PM

தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்திலும் காலை முதல் ஏராளமான வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குமலன்குட்டையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அந்த தொகுதியை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தார். அப்போது, அவரது வாக்காளர் ஆவணங்களை தேர்தல் அலுவலர்கள் வாங்கி ஆய்வு செய்தனர். இதில், அவரது பெயரில் ஏற்கனவே வாக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அதாவது, தினேஷ் என்ற இளைஞரின் வாக்கை வேறொரு நபர் கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதனை, தேர்தல் அலுவலர்கள் அந்த இளைஞரிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் நான் தற்போது தான் வாக்களிப்பதற்காக வந்துள்ளேன்.

49 ஓ விதிகளின்படி சேலஞ்ச் ஓட்டுக்கு அனுமதி

ஆனால், எனது வாக்காளர் அடையாள எண்ணில் வேறொரு நபர் வாக்குப்பதிவு செய்துள்ளார் என்று குற்றச்சாட்டை முன் வைத்தார். இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் மீண்டும் அவரது வாக்காளர் அடையாள அட்டை, பூத் சிலிப் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி மீண்டும் பரிசோதனை செய்தார். இதைத் தொடர்ந்து, இளைஞர் தினேஷுக்கு 49 ஓ என்ற விதிப்படி, சேலஞ்ச் வாக்கு செலுத்துவதற்கு தேர்தல் ஆணையர் அனுமதி அளித்தார்.

மேலும் படிக்க: தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படுமா? தேர்தல் ஆணையத்திற்கு தவெக தலைவர் விஜய் அதிரடி கடிதம்!

கள்ள ஓட்டு குற்றச்சாட்டை முன் வைத்த இளைஞர்

இந்த சம்பவம் தொடர்பாக இளைஞர் தினேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் தற்போது தான் தனது வாக்கை பதிவு செய்வதற்காக வந்திருந்தேன். ஆனால், எனது வாக்காளர் அடையாளங்களை பரிசோதித்த தேர்தல் அலுவலர் உங்களது பெயர் மற்றும் வாக்காளர் அடையாள எண்ணில் ஏற்கனவே வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனித்துவமான வாக்காளர் அடையாள எண்

ஏனென்றால், வாக்காளர் அடையாள எண் என்பது தனித்துவமான எண்ணாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில், எனது அடையாள எண்ணை பயன்படுத்தி வேறு ஒரு நபர் எப்படி வாக்கு அளிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியதுடன், கள்ள ஓட்டு குற்றச்சாட்டையும் முன் வைத்தார். மேலும், தேர்தல் ஆணையர் தனக்கு சேலஞ்ச் ஓட்டு அளிப்பதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார். பின்னர்,  அந்த இளைஞர் சேலஞ்ச் ஓட்டு செலுத்துவதற்காக சென்றார். இதனால், அந்த வாக்குச்சாவடியில் பரபரப்பு தொற்றி கொண்டது.

மேலும் படிக்க: திமுக – தவெகவினர் மோதல்… வாணியம்பாடியில் வாக்குப்பதிவு நிறுத்தம்…!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.