தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தொண்டர்களுக்கு மிகவும் உருக்கமான மற்றும் அதிரடியான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தமிழகத்தில் மீண்டும் ஒரு நல்லாட்சி மலர வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் வரலாறு காணாத வகையில் வாக்களித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழலில், வாக்கு எண்ணும் மையங்களில் அதிமுக சார்பில் முகவர்களாகப் பணியாற்றும் தொண்டர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
”வெற்றிக் கனியைச் சிந்தாமல் சிதறாமல் பெற்று வந்து புரட்சித் தலைவி அம்மாவின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தனது ரத்தத்தின் ரத்தங்களுக்கு இபிஎஸ் கட்டளையிட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது எவ்வித கவனச்சிதறலும் இன்றி, மக்களின் தீர்ப்பைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இபிஎஸ்ஸின் இந்த அறிக்கை அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தேர்தல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.