தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள கருத்து பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில்,நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும், பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை பாதுகாப்பதிலும் மத்திய அரசு தகுந்த முன்னெடுப்புகளை எடுக்காமல், விலை உயர்வு மற்றும் வேலைவாய்ப்பு பற்றாக்குறை போன்ற அடிப்படை சிக்கல்களுக்கு உறுதியான தீர்வுகளை வழங்கத் தவறிவிட்டதாக அவர் சாடியுள்ளார்.

இதனால் நடுத்தர வர்க்கத்தினரும் சாதாரண மக்களும் மேலும் சுமையை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.மேலும், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் மற்றும் 5 கிலோ சிலிண்டரின் விலைகளை ஒரே நாளில் ரூ.993 மற்றும் ரூ.261 அளவுக்கு உயர்த்திய எண்ணெய் நிறுவனங்களின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் மறைமுக ஒப்புதல் இன்றி இத்தகைய முடிவு எடுக்கப்படுவது சாத்தியமில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த திடீர் விலை உயர்வு சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், உணவகத் தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாகவும், இதன் தாக்கம் பொதுமக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளிலும் நேரடியாக பிரதிபலிக்கும் என்பது தவிர்க்க முடியாத உண்மை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, மத்திய அரசு தனது பொருளாதார கொள்கைகளை மறுபரிசீலனை செய்து, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த துரிதமான மற்றும் மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவர் வலியுறுத்தியுள்ளார்.