பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் காவல் நிலையத்தில் 43 வயதுடைய பெண் ஒருவர் பரபரப்பான புகார் மனுவை அளித்தார். அதில், திருமணமாகி ஒரு மகள் உள்ள நான், குடும்பத் தகராறு காரணமாக கணவரை பிரிந்து மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறேன். சினிமா துறையில் ஒப்பனை கலைஞராக பணியாற்றி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.மேலும், 2021-ஆம் ஆண்டு சந்திரேகவுடா என்ற நபருடன் அறிமுகம் ஏற்பட்டது.
அவர் தன்னை ராமநகரில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுபவர் என அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் அவர் அடிக்கடி வீட்டிற்கு வரத் தொடங்கி, இருவருக்கும் நெருக்கம் அதிகரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டு, தனக்குத் தெரியாமல் தனிப்பட்ட தருணங்களை வீடியோவாக பதிவு செய்ததாகவும், பின்னர் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தபோதிலும், அந்த வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி ரூ.5 லட்சம் பணம் பறித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து அந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி வந்ததால் தான் இப்போது புகார் அளிக்க நேரிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், குறித்த நபரின் செல்போனில் பல பெண்களுடன் ஆபாச வீடியோ அழைப்புகள் நடத்தப்பட்ட காட்சிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சந்திரேகவுடாவை கைது செய்தனர்.
விசாரணையில், அவர் ராமநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழுவில் உறுப்பினராக இருந்தது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதனுடன், தன்னை காவல்துறை அதிகாரி, பத்திரிகையாளர் என போலியாக அறிமுகப்படுத்தி சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்ததும், அதற்காக போலி அடையாள அட்டைகளை தயாரித்து பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டுள்ளது.
சிலரிடம் தன்னை நீதிபதி எனவும் கூறி மோசடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் பல பெண்களை ஏமாற்றி நெருங்கி பழகி, அவர்களுடன் எடுத்த தனிப்பட்ட வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் பறித்த சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது செல்போனை ஆய்வு செய்த காவலர்கள், அதில் ஏராளமான ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதனுடன், போலி அடையாள அட்டைகள் மற்றும் சில பெண்களின் ஆதார் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்திரேகவுடாவிடம் காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்களை கவரும் வகையில் இனிமையான வார்த்தைகளை பயன்படுத்தி ஏமாற்றுவதில் தேர்ச்சி பெற்றிருந்ததாகவும், அவரது வலையில் பலர் சிக்கியிருக்கலாம் என காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.