அமெரிக்காவின் பட்ஜெட் விமானச் சேவையின் முன்னோடியான ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் (Spirit Airlines) தனது 34 ஆண்டுகாலப் பயணத்தை மே 2, 2026 முதல் அதிகாரப்பூர்வமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.
ஈரான்-மேற்காசியப் போர் காரணமாக எரிபொருள் விலை கிடுகிடுவென உயர்ந்ததும், ஏற்கனவே இருந்த கடுமையான நிதிச் சுமையுமே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்நிறுவனம் இருமுறை திவால் நிலைக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தை மீட்க டிரம்ப் நிர்வாகத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட விமான நிறுவனத்திற்கு மட்டும் நிதி உதவி வழங்குவதை குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் விமானத் துறையினரும் எதிர்த்ததால், மீட்பு ஒப்பந்தத்தைக் கடன் வழங்குவோர் நிராகரித்துவிட்டனர்.
இதன் விளைவாக, 14,000 நேரடி ஊழியர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் என மொத்தம் 17,000 பேர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். முன்பதிவு செய்த பயணிகளுக்குக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்றும், அவர்கள் மாற்றுச் சேவைகளை நாட வேண்டும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.