இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீநாத், சஞ்சய், பாலகிருஷ்ணன், மணிகண்டன், ருத்ரன், ராஜேஷ், பிரசாந்த், செல்வம் மற்றும் ரஜினி ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த படத்தை ஆன்லைன், சமூக வலைதளங்களில் வெளியிட்டதில், தங்களுக்கு எந்த பயனும் இல்லை. கூகுள் ட்ரைவ் லிங்க் மட்டும் பெற்றனர். இவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், "பல கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டதால், பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்; சட்டவிரோதமாக வெளியிடப்பட்டதால், பெரும் தொகையை ஈட்டி உள்ளனர்; புலன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது; இந்த சதித்திட்டத்தின் மற்ற தொடர்புகள் குறித்தும் கண்டறியப்பட வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது" என வாதிட்டார்.
பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்டதால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. எனவே ஜாமீன் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றச்சாட்டுகளின் தீவிரம், தற்போதைய புலன் விசாரணை நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.