தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அதிகபடியான இடங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளது. ஒருவேளை அருதிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், கூட்டணி அமைத்து அல்லது பிற கட்சிகளின் ஒத்துழைப்புடன் த.வெ.க ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.
வரலாறு திரும்புகிறதா?இந்தியக் குடியரசின் முதல் பொதுத்தேர்தல் 1952-ல் நடைபெற்றது. அப்போது, சென்னை மாகாணத்தில் (Madras State) எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால், தொங்கு சட்டமன்ற (Hung Assembly) சூழல் உருவானது. மொத்தம் உள்ள 375 இடங்களில், பெரும்பான்மைக்கு 188 இடங்கள் தேவை. ஆனால், இந்திய தேசிய காங்கிரஸ்152 இடங்களை மட்டுமே பெற்றது. அது, பெரும்பான்மைக்கு 36 இடங்கள் குறைவு.
அந்த சமயத்தில், கம்யூனிஸ்ட் கட்சி (CPI) 62 இடங்களைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. எதிர்க்கட்சிக் கூட்டணியினர் தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரினார்கள். ஆனால், அப்போதைய ஆளுநர் ஸ்ரீ பிரகாசா, தனிப்பெரும் கட்சியான காங்கிரஸையே முதலில் ஆட்சி அமைக்க அழைக்க முடிவு செய்தார்.
காங்கிரஸை வலுப்படுத்த, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சி. ராஜகோபாலாச்சாரி மீண்டும் அழைக்கப்பட்டார். அவர் சட்டமேலவை உறுப்பினராக (MLC) நியமிக்கப்பட்டு, முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் தனது அரசியல் சாணக்கியத்தனத்தால், காமன்வீல் கட்சி மற்றும் உழைப்பாளர் கட்சி போன்ற சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவைத் திரட்டி, சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.
மீண்டும் தொங்கு சட்டமன்றம்?தமிழகத்தின் முதல் தேர்தலே ஒரு தொங்கு சட்டமன்றமாக அமைந்து, பெரும் அரசியல் பரபரப்புக்கு இடையே காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. 1952-ல் நடந்தது போன்ற நிலைமை மீண்டும் தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தற்போதைய நிலவரப்படி, அதிக இடங்களை கொண்ட கட்சியாக த.வெ.க உருவாகியுள்ளது. அந்த வகையில், ஆளுநர் த.வெ.க-வை தான் ஆட்சியமைக்க அழைப்பார். அப்போது,118 என்ற மெஜாரிட்டியை எட்டாத பட்சத்தில் என்ன நடக்கும் என பார்க்கலாம்.
முதல் வாய்ப்புத.வெ.க சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தருணத்தில் அ.தி.மு.க வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தால் த.வெ.க ஆட்சி அமையும்.
இரண்டாம் சாய்ஸ்
வாக்கெடுப்பை திமுக புறக்கணித்து, சட்டமன்றத்தில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தாலும் த.வெ.க ஆட்சி அமையும். இந்த இரு வாய்ப்புகளிலும் த.வெ.க ஆட்சி அமைக்கும் நிலையில், எந்த வித மக்கள் நல திட்டமோ, அரசாணையோ சட்டசபையில் பாஸ் ஆவதில் சிக்கல் ஏற்படும். அவற்றை நிறைவேற்ற திராவிடக் கட்சிகளின் ஆதரவு தேவை.
மூன்றாவது சாய்ஸ்!காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட், விசிக, சிபிஐ.எம் ஆதரவு அளித்து மெஜாரிட்டி நிரூபிக்கப்பட்டால் த.வெ.க. ஆட்சி அமையும். ஆனால் எப்போதுமே தலைக்கு மேல் கத்தி தொங்கும் ஆட்சியாகி விடும். காரணம் அந்தக் கட்சிகளின் தலையீடு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும். எனவே தமிழ்நாடு வித்தியாசாமான காலகட்டத்தைச் சமாளிக்க வேண்டியதிருக்கிறது. ஆனாலும் ஒரு நன்மை நடக்கும்.. அது, இனி வரும் காலங்களில் அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் கொடுப்பதை மட்டுமே நம்பி களமிறங்க மாட்டார்கள்!