ஆளுநரைச் சந்தித்த விஜய்; ஆட்சி அமைக்க உரிமை கோரிய தவெக! - பதவியேற்பு எப்போது?
Vikatan May 06, 2026 08:48 PM

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி்க் கழகம் யாரும் எதிர்பாராத வகையில் 108 இடங்களைக் கைப்பற்றி, சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாள்களாகியும், தமிழக ஆளுநர் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் த.வெ.க தலைவரை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலதாமதம் செய்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதற்கிடையில், ராகுல் காந்தியின் ஆலோசனையின் பேரில், காங்கிரஸ் மேலிடப் பொருப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்திருந்தது. மேலும், இடதுசாரி கட்சிகள், விசிக ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அந்தக் கட்சிகளிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லை.

ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

அதைத் தொடர்ந்து, மூத்த அரசியல்வாதியும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்ரமணிய சுவாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``ஜனநாயகத்தின் மாண்பைக் காக்கும் வகையில், ஆளுநர் உடனடியாக த.வெ.க தலைவரை அழைத்து அமைச்சரவை அமைக்க உத்தரவிட வேண்டும்.விஜயை முதலமைச்சராகப் பதவியேற்கச் செய்து, சட்டப்பேரவை தளத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்." எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதே நேரம், தவெக தலைவர் விஜய், தவெக நிர்வாகிகளான ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார், ஆனந்த் உள்ளிட்டவர்கள் ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்தனர். அப்போது ஆளுநரிடம், தவெக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என, தவெக தலைவர் உரிமை கோரி மனு வழங்கியிருக்கிறார்.

தற்போது ஆளுநர் எப்போது, என்ன முடிவெடுப்பார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதற்கிடையில் நாளை காலை 11:30 மணிக்கு நேரு உள் விளையாட்டரங்களில் விஜய் தலைமையிலான தவெக-வின் பதவியேற்பு விழா நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆரத்தழுவி வரவேற்ற தவெக: ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கிய காங்கிரஸ்! - அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.