'தவெக-வுக்கு ஆதரவு கொடுப்பதைத் தாண்டி அரசின் செயல்பாடுகளில் பொறுப்பேற்றுக்கொள்வோம்'- கிரிஷ் சோடங்கர்
Vikatan May 06, 2026 08:48 PM

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.

ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.க-விற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.

ராகுல் காந்தி - விஜய்

ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், த.வெ.க ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்புக்கு பிறகு விஜய்யை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கொடுத்தனர். அவர்களுடன் பிரவீன் சக்கரவர்த்தி, கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் சென்று தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்தச் சந்திப்பிற்குப் பிறகு காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவர், ``த.வெ.க தலைவர் விஜய்யைச் சந்தித்து எங்களது ஆதரவை தெரிவித்தோம்.

எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தையும் நாங்கள் அளித்துள்ளோம். மேலும் சில கட்சிகளும் த.வெ.க-வுக்கு ஆதரவளிக்க வேண்டும். த.வெ.க-வுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள். புதிதாக அமையும் த.வெ.க அரசாங்கத்தில் ஓர் அங்கமாக காங்கிரஸ் இருக்கும். நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதையும் தாண்டி, அரசின் செயல்பாடுகளில் நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்வோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

`சேர்வதும் பிரிவதும் இயல்பு; 2014-ல் திமுக எங்களுக்கு இதைதான் செய்தது'- எம்.பி ஜோதிமணி சொல்வது என்ன?
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.