தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆளுநரைச் சந்தித்த போது, வரும் மே 7-ம் தேதி காலை 11.30 மணிக்குச் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சராகப் பதவியேற்க அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிக்க இரண்டு வார கால அவகாசமும் அவர் கோரியுள்ளதாகப் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்தச் சந்திப்பு, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை எண்ணிக்கைக்கு இன்னும் 5 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தவெக-வுக்குத் தேவைப்படுகிறது. இந்த 5 இடங்களைப் பெறுவதற்காக மற்ற கட்சிகளுடன் தவெக தரப்பு தற்போது தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 108 இடங்களைப் பெற்றுள்ள தவெக, எப்படியாவது பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
ஒருபுறம் பெரும்பான்மையை நிரூபிக்கக் காய்நகர்த்தல்கள் நடைபெற்று வந்தாலும், மறுபுறம் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் சென்னையில் போர்க்கால அடிப்படையில் வேகமெடுத்துள்ளன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான முறையில் விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதால், நகரம் முழுவதும் தவெக தொண்டர்களின் வருகை அதிகரித்துள்ளது. நாளை தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதால், ஒட்டுமொத்த மாநிலமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறது.