தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பிரபாஸ், தற்போது இவர் 'பவுஜி' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் நகரில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை பவுஜி படக்குழுவினர் தங்கியிருந்த இடத்திலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு வேனில் புறப்பட்டனர்.
குறித்த வேன் ஐதராபாத் நகருக்கு வெளியே உள்ள அப்துல்லாபூர்மெட் அருகே சென்றபோது, தூப்ரன்பேட் பாலம் பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சிமெண்ட் தடுப்பு கட்டைகள் மீது பயங்கரமான வேகத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் படக்குழு ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த 05 ஊழியர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து சௌட்டுப்பல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதாவது இந்த விபத்து நடந்த நேரத்தில் வேன் அதிவேகமாக இயக்கப்பட்டதா..? வாகனத்தில் இயந்திர கோளாறு ஏதும் ஏற்பட்டு இருந்ததா..? அல்லது டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்தாரா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து பவுஜி படத்தின் படப்பிடிப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.