'பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி'; விவசாயிகளுக்கு பிரதமர் மோடி வாக்குறுதியின் படி, 6,000-லிருந்து ரூ.9,000-ஆக உயர்த்தப்படுமா..?
Seithipunal Tamil May 07, 2026 06:48 AM

2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் போது, அங்கு பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி ரூ.9,000-ஆக உயர்த்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

தற்போது மேற்கு வாங்க தேர்தலில் பாஜக 207 தொகுதிகளை கைப்பற்றி முதல் முறையாக ஆட்சியமைக்க உள்ளது. இதனையடுத்து, மத்திய அரசின் 'பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டு உதவித்தொகை ரூ.6,000-லிருந்து ரூ.9,000-ஆக உயர்த்தப்படுமா என்ற விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

தற்போது இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு மூன்று தவணைகளாக தலா ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.6,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிதி உயர்வு தொடர்பாக 'மகாராஷ்டிரா மாடல்' ஒரு முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது. அம்மாநிலத்தில், மத்திய அரசின் ரூ.6,000 நிதியுடன், மாநில அரசு தனது 'நமோ ஷேத்காரி மகாசம்மான் நிதி' திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.6,000 வழங்கி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ.12,000 கிடைக்கச் செய்கிறது.

இந்நிலையில், இதேபோன்ற நடைமுறை மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில்,  விவசாயிகள் இத்திட்டத்தின் 23-வது தவணைக்காகக் காத்திருக்கின்றனர். முன்னதாக 22-வது தவணை மார்ச் 2026-இல் வழங்கப்பட்டது. 

அடுத்த தவணை வரும் ஜூன் இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இத்திட்டத்தின் பலன்களைப் பெற விவசாயிகள் சில முக்கியமான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

அதாவது, இந்த திட்டத்தை பெரும் பயனாளியின் வங்கிக் கணக்கு கட்டாயம். ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் e-KYC நடைமுறை முழுமையாகச் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் (கணவன், மனைவி மற்றும் சிறு குழந்தைகள்) ஒருவர் மட்டுமே இந்த நிதி உதவியைப் பெறத் தகுதியுடையவர்.

அத்துடன், விவசாயிகள் தங்களின் பெயர் தகுதியுள்ளோர் பட்டியலில் உள்ளதா என்பதை pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'Know Your Status' பகுதிக்குச் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், இடைத்தரகர்கள் இல்லாத நேரடிப் பணப்பரிமாற்றம் மூலம் விவசாயிகளின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.