திமுகவுடன் அதிமுக கூட்டணி; எடப்பாடி பழனிசாமி அடுத்த முதலமைச்சர்; பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மூத்த பத்திரிகையாளர்..!
Seithipunal Tamil May 07, 2026 05:48 AM

அதிமுகவுடன் திமுக கூட்டணி அமைத்து எடப்பாடி பழனிசாமி முதல்வராகலாம் என மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆட்சியமைக்க 118 என்ற பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதனையடுத்து, காங்கிரஸிடம் பேசி தவெக ஆதரவு பெற்றுள்ளது. இதன் மூலம், காங்கிரஸின் ஐந்து எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். இதன் மூலம் தவெகவின் பலம் 112ஆக உள்ளது. (விஜய் வெற்றிப்பெற்ற ஒரு தொகுதி நீங்கலாக)

இதனையடுத்து தவெக தலைவர் விஜய், காங்கிரஸின் ஆதரவு கடிதத்துடன் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க ஆதரவு கோரினார். ஆனால், ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து பெரும்பான்மைக்கான 118 வந்தபிறகு ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதாக கூறியுள்ளது.

இந்நிலையில், இன்று பிரபல தமிழ்நாடு செய்தி சேவையில்  ‘சொல்லதிகாரம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் பங்கேற்று பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தில் பேசும் போது கூறியதாவது; ''நான் முதலில் விசிக, இடதுசாரிகள் வருவார்கள் என நினைத்தபோது, அவர்கள் தற்போது கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை. இன்றைய காலை மற்றும் மாலைக்குள் நிலவரங்கள் மாறிவிட்டன. அடுத்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள் என சொல்லவேண்டிய சூழல் வரலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், முதல் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தும் அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. பெரும்பான்மையில் ஆளுநர் திருப்தி அடையவில்லை. அதனால், அடுத்த பெரிய கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கலாம். அடுத்த பெரிய கட்சி திமுகதான் என்றால், அது ஆதரவு கடிதம் கொடுத்தால் போதும் அல்லவா?

அடுத்த கூட்டணி என்பது திமுகதான். ஆனால், அவர்களிடம் ஆதரவு கடிதம் பெற்றாலும், அதுவும் ஆளுநரின் ஆலோசனைக்கு உட்பட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்திற்குள்தான். வேறு எங்கும் தேவையில்லை என உச்சநீதிமன்றம் சொல்லி உள்ளது.

2017-இல் இருந்து நாம் ஆளுநர்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம். சசிகலா பிப்ரவரியில் பதவி பிரமாணத்திற்காக காத்திருக்கும்போது வித்யாசாகர் என்னென்ன விளையாட்டுகள் விளையாடினார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதே விளையாட்டு மீண்டும் பாஜகவின் ஆசியோடு நடந்துக்கொண்டிருக்கிறது'' என மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.