ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நீண்டகால கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன், நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சிஎஸ்கே அணிக்கு மாறினார். அவருக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்குச் சென்றனர்.
அனுபவமிக்க ஜடேஜா அல்லது இளம் வீரர்களான ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல் ஆகியோரில் யாராவது ஒருவர் கேப்டன் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ரியான் பராக் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த முடிவு அப்போதே பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது நடைபெற்று வரும் தொடரில் பராக்கின் பேட்டிங்கும், கேப்டன்சியும் சொல்லிக்கொள்ளும் படி இல்லாததால் ராஜஸ்தான் அணி கடும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
இது குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அணியில் ரன் எடுக்கத் திணறும் ஒரு வீரருக்கு எதன் அடிப்படையில் கேப்டன் பதவி வழங்கப்பட்டது என்று தனக்குப் புரியவில்லை என அவர் கூறியுள்ளார்.
2024 சீசனில் அவர் சிறப்பாக விளையாடி இருந்தாலும், சஞ்சு சாம்சனுக்குப் பிறகு அனுபவமுள்ள ஜடேஜாவிற்குத்தான் அந்தப் பொறுப்பை வழங்கியிருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ரியான் பராக்கின் செயல்பாடுகளில் அதிகப்படியான தன்னம்பிக்கை தெரிவதாகவும், அது கர்வமாகத் தோன்றுவதாகவும் மஞ்சரேக்கர் வெளிப்படையாகத் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.