தமிழக அரசியல் களத்தில் ஆட்சி அமைப்பதற்கான ஆடுபுலி ஆட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது அடுத்த அதிரடி நகர்வைத் தொடங்கியுள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து ஆதரவு கேட்டார்.
தற்போதைய சூழலில் எங்களால் நேரில் வர முடியாததால் தொலைபேசியில் அழைப்பதாகக் கூறி தனது நிலைப்பாட்டை விளக்கினார்,” என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய், ஆட்சி அமைக்கத் தேவையான மெஜாரிட்டியைத் திரட்ட தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
அதன் ஒரு பகுதியாகவே இடதுசாரிகள் மற்றும் விசிக போன்ற மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவைத் திரட்ட அவர் நேரடியாகவே களத்தில் குதித்துள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே காங்கிரஸ் விலகியதால் திமுக கூட்டணி ஆட்டம் கண்டுள்ள நிலையில், விஜய்யின் இந்தத் தொலைபேசி அழைப்பு தமிழக அரசியலில் மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கு ஆதரவு அளிப்பதா அல்லது தனது பழைய கூட்டணிக் கொள்கையிலேயே நீடிப்பதா என்பது குறித்து இடதுசாரி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து நாளை இறுதி முடிவை அறிவிக்கப் போவதாகத் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதனால் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் நாளை விசிக எடுக்கப்போகும் அந்த ‘முடிவை’ நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறது.