சட்டமன்றத் தேர்தலில் முழுமையான பெரும்பான்மையை எட்ட முடியாத சூழலில், ஆட்சியமைப்பதற்கான ஆதரவை திரட்ட தவெக தீவிர அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அரசியல் அமைப்புகளுடன் தவெக நிர்வாகிகள் தொடர் ஆலோசனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை தவெக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் நேரில் சந்தித்து ஆதரவு கோரியதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், விசிக தலைவர் தொல். திருமாவளவனை சந்தித்து அரசியல் ஆதரவை பெறுவதற்காக ஆதவ் அர்ஜுனா முக்கிய பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீனை தவெக நிர்வாகி அருண் ராஜ் சந்தித்து ஆதரவு கோரிக்கை முன்வைத்தார்.
ஆனால், தவெகவிற்கு ஆதரவு வழங்க இயலாது என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து அக்கட்சித் தரப்பில், “நாங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஓர் அங்கமாக இருக்கிறோம். அந்த கூட்டணியின் அரசியல் நிலைப்பாட்டிலிருந்து விலக முடியாது. ஸ்டாலின் எடுக்கும் முடிவே எங்களின் முடிவாக இருக்கும்.
திமுக கூட்டணியில் நேற்று இருந்தோம், இன்று இருக்கிறோம், நாளையும் தொடர்வோம்” என்று உறுதியாக தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.