200 யூனிட் இலவச மின்சார திட்டம் – அப்போ 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? – தமிழக அரசு விளக்கம்
TV9 Tamil News May 10, 2026 10:48 PM

சென்னை, மே 10 :  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மே 10, 2026 அன்று முதல்வராக பதவியேற்றார். அப்போது முதல் கையெழுத்தாக 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற திட்டத்தில் கையெழுத்திட்டிருந்தார். இதனால் ஏற்கனவே நடைமுறையில் 100 யூனிட் மின்சார திட்டம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இதற்கு தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அதன் படி,  2 கோடியே 46 லட்சம் வீடுகளுக்கு மின் நுகர்வு உள்ள நிலையில். 2 கோடியே 23 லட்சம் பேர் 500 யூனிட்டுக்கு கீழாக பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்களுக்கு 200 யூனிட் மின்சாரமும். 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு ஏற்கனவே உள்ள 100 யூனிட் மின்சாரம் இலவசம் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக மின்சாரத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் தற்போதுள்ள 100 யூனிட் இலவச மின்சார திட்டம் உள்ளபடியே தொடரும்.  வீட்டு மின்நுகர்வோர்கள் 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தினால் 200 யூனிட் மின்சாரம் இலவசம்.  500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் 100 யூனிட் மின்சாரம் இலவசம்  என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “தமிழ்த்தாய் வாழ்த்து முதல் மக்கள் முன் முதல் கையெழுத்து வரை”.. உறுதிமொழியேற்பு விழாவில் நடந்த மாற்றங்கள்!!

டிடிவி தினகரன் கண்டனம்

தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? – தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட… pic.twitter.com/tTpAqzuT6U

— TTV Dhinakaran (@TTVDhinakaran)

இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில்,  தவெக அரசின் 200 யூனிட் மின்சார அறிவிப்பில் முரண் உள்ளது. மாதம் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என கூறிவிட்டு இரு மாதத்துக்கு என அறிவிப்பதா?  என கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து தமிழக அரசியலில் நிலவி வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. குறிப்பாக கடந்த சில நாட்களாக திரில்லர் படங்களை போல நிமிடத்துக்கு நிமிடம் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டது. விஜய் முதல்வராக பதவியேற்பாரா என சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதித்துக்கொண்டனர். குறிப்பாக திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்கப்போவதாக வெளியான செய்திகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனையடுத்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், இந்திய முஸ்லீம் கட்சிகள் தவெகவிற்கு ஆதரவளிக்க, ஆட்சியமைக்க தேவையான ஆதரவு விஜய்க்கு கிடைத்தது. இதனயைடுத்து ஆட்சியமைக்க உரிமைகோரி விஜய் ஆளுநரை சந்தித்தார்.

இதையும் படிக்க : பணம் இல்லை என பேசாதீங்க.. திசைதிருப்பாதீங்க – முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கேள்விகளை அடுக்கிய முக ஸ்டாலின்!

இதனையடுத்து விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததன் பேரில் விஜய், இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். விஜய்க்கு விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய முஸ்லீம் லீக் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்தன. இந்த நிலையில் வருகிற மே 13, 2026க்குள் சட்டமன்றத்தில் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தமிழக ஆளுநர் கெடு விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.