தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தலைமையிலான கூட்டணி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு வழங்கியதையடுத்து, அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விஜய் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ளார்.சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை அமர்வில், தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும், ஜே.சி.டி.பிரபாகர் சபாநாயகராக இன்று பொறுப்பேற்றார்.
இந்த அரசியல் சூழ்நிலையில், புதிய அரசு சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நாளைக்குள் நிரூபிக்க வேண்டும் என்று அர்லேகர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, த.வெ.க. அரசு தனது பெரும்பான்மையை உறுதிப்படுத்தும் தீர்மானத்தை நாளை சட்டப்பேரவையில் முன்வைத்து வாக்கெடுப்பை சந்திக்க உள்ளது.இந்த பெரும்பான்மை சோதனையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான ஒரு பிரிவு உறுப்பினர்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் தமிழக வெற்றி கழக கூட்டணியின் பலம் 151 உறுப்பினர்களாக உயர வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.அதேபோல், பாட்டாளி மக்கள் கட்சியும் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.