எரிபொருள் வாங்குவதற்காகச் செலவிடப்படும் அந்நியச் செலாவணியை, எரிபொருளை சேமிப்பதன் மூலம் மிச்சப்படுத்தலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தெரிவித்து இருந்தார்.
அத்துடன், எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுமாறு நாட்டு மக்களை அறிவுறுத்தி 07 அறிவுரைகளை வழங்கியிருந்தார். இந்நிலையில் தனதுபாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சிறப்பு பாதுகாப்பு குழுவிற்கு பிரதமரின் அறிவுறுத்தலின்படி, அவரது பாதுகாப்பு வாகனங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளன. பிரதமரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் -ஷாவின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளன.
மேலும், ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களும், தங்கள் கான்வாய் எண்ணிக்கையை பாதியாக குறைத்துள்ளனர். தொடர்ந்து, விமான எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான சேவைகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளது. குறிப்பாக, சென்னை-சிங்கப்பூர், டெல்லி-நியூயார்க், டெல்லி-சிகாகோ, மும்பை-நியூயார்க் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் ஆகஸ்ட் வரை விமான சேவைகளை ஏர் இந்தியா குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.