தவெக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கீர்த்தனா, மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையான சொல் பயன்படுத்தியதாக கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ''தானும் மாற்றுத்திறனாளி தாய்க்கு பிறந்த மகள் தான்; அந்த வலியும் வேதனையும் எனக்கும் உள்ளது. மன்னிப்பு தெரிவித்துக்கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 107 இடங்களில் வெற்றிப் பெற்ற தவெகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காததால், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் ச. ஜோசப் விஜய், கடந்த 10-ஆம் தேதி பதவி ஏற்றார். அவருடன் சேர்ந்து சிவகாசி எம்.எல்.ஏ. கீர்த்தனா உட்பட ஒன்பது பேர் அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று (11ஆம் தேதி) எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, 232 சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.க்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக அமைச்சர் கீர்த்தனா, தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பை குறித்து பேசினார். அப்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து அவர் பயன்படுத்திய சொற்பதம் பெரும் கண்டனத்திற்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.