அதிமுக எஸ்.பி வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூன்று ராஜினாமா செய்த நிலையில் உடனடியாக தவெகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு அதிமுக இபிஎஸ்-எஸ்.பி வேலுமணி தரப்பு என இரண்டாக பிரிந்தது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. அதன் பின்னர் தவெக ஆட்சியமைக்க சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உட்பட 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.அதனால், எஸ்.பி.வேலுமணி தரப்பினருக்கு தவெக அமைச்சர் பதவிகளை தரப்போவதாக தகவல்கள் வெளியாகின.
மறுபக்கம், எடப்பாடி பழனிசாமியும் எஸ்.பி.வேலுமணி தரப்பினரை கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கினார். பின்னர், தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரிடம் கடிதத்தை வழங்கினார்.
இதையும் படிஙக்: ADMK MLA Resign: அதிர்ச்சி! அதிமுக எம்எல்ஏ-க்கள் 3 பேர் திடீர் ராஜினாமா - யார்? யார்?
இந்த 3 எம்எல்ஏ-க்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் நேரில் சந்தித்து அளித்தனர். அவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.
அதிமுக-வில் நடந்து வரும் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிசாமி மோதல் காரணமாக தங்களது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்ற காரணத்தால் இவர்கள் தற்போது தங்களது எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் ஐக்கியமாகியுள்ளனர்.
மதுராந்தகம் எம்எல்ஏ-வாக இருந்த மரகதம் குமரவேல் தவெக வேட்பாளர் எழில் கேத்ரின் எழில்மலையை காட்டிலும் 7 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தாராபுரம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த சத்யபாமா திமுக வேட்பாளர் இந்திராணியைக் காட்டிலும் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெருந்துறை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த ஜெயக்குமார் திமுக வேட்பாளர் வெங்கடாச்சலத்தைக் காட்டிலும் 10 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ஒரு குடும்பமாக தவெகவில் இணைந்து பயணிக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் இணைந்துள்ள மூவருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கபடலாம் என்று கூறப்படுகிறது.