முதல்வர் ஜோசப் விஜய்க்கு வாழ்த்துக்கள்...பெத்தி பட விழாவில் வாழ்த்திய ராம் சரண்
ராகேஷ் தாரா May 30, 2026 09:44 PM

பெத்தி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ராம் சரண் தமிழக முதல்வர் விஜய்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு மக்கள் சேவைக்காக வந்திருக்கும் முதல்வர் விஜய் வந்திருப்பதை நினைத்து தான் பெருமை கொள்வதாக ராம் சரண் தெரிவித்தார்

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பெத்தி  திரைப்படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார்.  மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது. பெத்தி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய நடிகர் ராம் சரண் தமிழக முதல்வர் விஜய் குறித்து ஒரு சில வார்த்தைகள் பேசினார். 

விஜய்க்கு வாழ்த்து சொன்ன ராம் சரண் 

பெத்தி நிகழ்வில் பேசிய ராம் சரண் " என்னுடைய அம்மா இங்கு தான் பிறந்தார். அதனால் ஒவ்வொரு முறை நான் சென்னை வரும் போது ஹோம் கிரவுட்ண்ட் வந்த மாதிரியான உணர்வு வரும் . இந்த படத்தைப் பற்றி எல்லாரும் சொல்லிட்டாங்க. இந்த படம் முடிவதற்கு கிட்டதட்ட இரண்டரை வருடமாகிவிட்டது. ஆனால் படத்தின் இயக்குநர் மட்டும் இந்த படத்திற்காக 5 ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் சார் ஒரு மிகப்பெரிய தூண். கடந்த 10 நாட்களாக அவர் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார். அதிகாலை தான் அவர் தூங்க போகிறார். அதே போல் ஷிவாண்ணா வந்தாலே திரை தீப்பிடிக்கும் . ஜெயிலர் படத்தை நான் அத்தனை முறை பார்த்திருக்கிறேன் . இந்த படத்தை கஷ்டப்பட்டு இல்லை ரொம்ப இஷ்டப்பட்டு பண்ணேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு போய் என்னுடைய அம்மாவிடம் படத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பேன். நான் எப்போதெல்லாம் ஒரு படத்தைப் பற்றி நிறைய பேசுகிறேனோ அந்த படமெல்லாம் பெரிய வெற்றிபெற்றிருக்கிறது. இந்த படத்தை குழந்தைகளிடம் கொண்டு சேருங்கள். 

கடைசியாக நம்ம தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தன்னுடைய கரியரில் உச்சத்தில் இருக்கும் போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்கள் சேவைக்காக வந்திருக்கிறார். திரைத்துறையை சேர்ந்த ஒரு நபராக நான் ரொம்ப பெருமை கொள்கிறேன். தமிழ்நாடு முதல்வர் மட்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் " என்று ராம் சரண் பேசினார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.