CM Vijay Trisha: முதலமைச்சர் விஜய் உடன் சேர்ந்து நடிகை த்ரிஷா துக்க வீட்டிற்கு சென்றது குறித்து, திமுக மற்றும் தவெகவினர் இடையே இணையத்தில் வார்த்தை மோதலை உருவாக்கியுள்ளது.
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகிணி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இதையடுத்து சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு பலரும் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அஜித்குமாரின் நெருங்கிய நண்பரும், முதலமைச்சருமான விஜயும் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். மோகினியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், அஜித்தை கட்டியணைத்தும் ஆறுதல் கூறினார். அப்போது அவர் பயணித்த வாகனத்திலேயே நடிகை த்ரிஷாவும் சென்று இருந்தார். இறுதியாக அஜித்தும் அவரது மனைவி ஷாலினியும் வாசல் வரை வந்து, முதலமைச்சர் விஜயை வழியனுப்பி வைத்தனர். இந்நிலையில் துக்க வீட்டிற்கு விஜய் த்ரிஷாவுடன் சென்ற விவகாரம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மனைவி சங்கீதா உடனான விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், த்ரிஷாவை விஜய் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம்செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் விவாகரத்து கூட பெறாத நிலையில், நடிகையை எல்லா இடத்திற்கும் குறிப்பாக துக்க வீட்டிற்கு கூட அழைத்துச் செல்வது நியாயமா? அரசு செலவில் முதலமைச்சரின் பாதுகாப்பிற்காக தான் கான்வாய் வசதி வழங்கப்படுகிறது. அதில் தனிநபர்களை எப்படி விஜய் அழைத்துச் செல்லலாம்? இந்த நிகழ்வை எல்லாம் பார்க்கும்போது சங்கீதாவின் மனம் புண்படாதா? என சரமாரியாக கேள்விகளை திமுக தரப்பினரும் முன்வைத்து வருகின்றனர். அதேநேரம், உங்களது தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும், விவாகரத்து பெறும் வரையிலாவது த்ரிஷாவுடன் சிறிது இடைவெளியை பின்பற்றலாமே என பொதுவான நெட்டிசன்களும் விஜய்க்கு அறிவுறுத்தி வருகின்றனர். உங்களது செயல் தவறான முன்னுதாரணமாக அமையக்கூடும் எனவும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இணையத்தில் முன்வைக்கப்படும் சில மோசமான, அநாகரீகமான மற்றும் தரம் குறைந்த சில பதிவுகளை மட்டும் குறிப்பிட்டு, துக்க வீட்டிலுமா அரசியல் செய்வீர்கள்? என தவெகவினர் பதிலளித்து வருகின்றனர். ஆக்கப்பூர்வமாகவோ அல்லது விஜயின் அரசியல் மறும் நிர்வாக செயல்பாடுகள் காரணமாகவோ அவரை தாராளமாக விமர்சிக்கலாம். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து ஏன் அரசியல் செய்ய வேண்டும்? குறிப்பாக, முதலமைச்சர் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அமைச்சர் ரமேஷ் போன்றோரை சாதியை வைத்து சாடுவது போன்ற மிகவும் மலிவான அரசியலில் திமுகவின் ஈடுபட்டு வருவதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரம், அரசு பணத்தை விஜய் வீண் செலவு செய்வதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், அரசு மற்றும் தனிப்பட்ட பயணம் என எதுவானாலும் முதலமைச்சர் விஜய் எங்கு சென்றாலு, அவரது பாதுகாப்பிற்கான கான்வாய் அவருடன் செல்வதை தவிர்க்க முடியாது. அதோடு, இந்த பயணத்தை யாருக்கும் தெரியாமல் மறைக்க வேண்டும் என்றெல்லாம் விஜய் முற்படவில்லையே, அப்படி இருக்கையில் எதற்காக இப்படி மிகவும் தரக்குறைவான செயல்களில் எதிர்தரப்பில் ஈடுபட வேண்டும் எனவும் தவெகவினர் பதிலடி தந்து வருகின்றனர்.