Mysskin: நடிகையின் காலில் விழுந்த இயக்குநர் மிஷ்கின்.. பட விழாவில் அதிர்ச்சி சம்பவம்.. என்ன காரணம்?
பேச்சி ஆவுடையப்பன் June 13, 2026 10:44 AM

விஜய் ஆண்டனி நடித்துள்ள நூறு சாமி படத்தின் நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின், நடிகை சுவாசிகாவின் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. 

நூறு சாமி படம்

விஜய் ஆண்டனி இசையமைத்த டிஷ்யூம் படத்தை இயக்கியவர் சசி. இந்த படத்தில் இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி பணியாற்றியிருந்தார். சசி தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார். இவரின் இயக்கத்தில், விஜய் ஆண்டணி ஹீரோவாக நடித்த  “பிச்சைக்காரன்” படம் கடந்த 2016ம் ஆண்டு  வெளியானது. அம்மா பாசத்தை மையமாக வைத்து வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து சசி - விஜய் ஆண்டனி இருவரும் நூறு சாமி படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். 

இந்த படம் ஜூன் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சுவாசிகா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் நூறு சாமி படத்தில் கருணாஸ், லிஜிமோல் ஜோஸ், முனீஸ்காந்த், அஜய் தீஷன், ஜென்சன் திவாகர், அருள்தாஸ், சபிதா ராய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கணவனை இழந்த பெண் மறுமணம் செய்வது தொடர்பான  உணர்வுப்பூர்வமான கதையமைப்புடன் நூறு சாமி படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. 

காலில் விழுந்த மிஷ்கின்

இந்த நிலையில் நூறுசாமி படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் மிஷ்கின், முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் இயக்குநர் மிஷ்கின் பேசுவதற்காக மேடையேற தயாரானார். அப்போது அருகிலிருந்த நடிகர் விஜய் ஆண்டனிக்கு கைகொடுத்த அவர், அடுத்ததாக நின்ற நடிகை சுவாசிகாவின் காலில் விழுந்து தொட்டு வணங்கினார். இதனைக் கண்டு பதறிப்போன சுவாசிகா மிஷ்கினை எழுப்பி அவரது கைகளைப் பற்றி நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்னார். இதன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

நூறு சாமி படம் பார்த்த மிஷ்கின், அதில் மிகவும் சிறப்பாக நடித்ததால் சுவாசிகாவுக்கு நன்றி சொல்லும் வண்ணம் அவரின் காலை தொட்டு வணங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், “நான் வாழ்க்கையில் பார்த்த நூறு சாமிகளில் ஒருவர் இயக்குநர் சசி. சினிமாவில் சாமிகளில் மிகவும் குறைவு. சசி ஒரு மாதத்திற்கு ஒருமுறை என்னுடன் உரையாடி விடுவார், என்னைப் பற்றி பேசி விடுவார். சசிக்கு என்றுமே மரணமே கிடையாது. 

மனிதர்களின் வாழ்க்கையை அவர் தொடர்ந்து உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார். சசி இந்த படத்தின் கதையை ஒரு 10 நிமிடம் சொன்னார். நான் அதைப் பற்றி நாங்கள் 10 நாட்கள் இந்த படத்தின் கதைப் பற்றி பேசினேன். நூறு சாமி படத்தை பற்றி நான் 3 மணி நேரம் என் உதவி இயக்குநர்களுடன் பேசிக் கொண்டேன். ஒரு நல்ல படம் பார்த்தால் 25 படங்கள் அசால்ட்டாக செய்யலாம் என்ற உத்வேகம் வந்து விடும். அப்படிப்பட்ட ஒரு படம் தான் நூறு சாமி” என நெகிழ்ச்சியாக பேசினார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.